தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் கிடா போன்ற சில படங்கள் பிரம்மாண்ட கதையை நம்பி களமிறங்கும் என்பதற்கு இது சான்று.
தீபாவளி பண்டிகைக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் மத்தியில் ரூ.500-க்கி வழியில்லாத சாமானியனின் கதை தான் இது.
பூ ராமு – பாண்டியம்மாள் இவர்கள் பெற்றோரை இழந்த தங்கள் பேரனை வளர்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் விளம்பரத்தில் பார்த்த ஒரு விலை உயர்ந்த ஆடையை வாங்கி கேட்கிறான் பேரன். அதை வாங்க இவர் போராடும் கதை ஒரு பக்கம்.
மற்றொரு பக்கம் ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை செய்பவர் காளி வெங்கட். ஒரு கட்டத்தில் அவரது முதலாளியிடம் பிரச்சனை ஏற்படவே தீபாவளி என்று தானே தனியாக ஒரு கடையை திறப்பேன் என சவால் விடுகிறார்.
இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்கள்..
நடிகர் பூ ராமு தற்போது மறைந்து விட்டாலும் அவரது இந்த கேரக்டர் என்றும் மனதில் நிற்கும். கிடா மூலம் தன் கம்பீர நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேரனுக்காக அவர் செய்யும் ஒவ்வொன்றும் இப்படி ஒரு தாத்தா நமக்கு இல்லையே என்று குழந்தைகளை ஏங்க வைக்கும்.
அநீதி படத்தில் தங்க புள்ளையாக வந்து தங்கமாக ஜொலித்த காளி வெங்கட் இதில் கறி வெட்டும் கேரக்டரில் நம் உள்ளங்களை துண்டாக்கி இருக்கிறார். எங்குமே மிக இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்.
அதுபோல பூராமின் மனைவியாக பாண்டியம்மா.. பேரனாக மாஸ்டர் தீபன் ஆகியோரும் நாங்களும் நடிப்பில் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ்டர் தீபன் காட்டும் திருட்டு முழி ரியாக்ஷன் சூப்பர்.
க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் காளி வெங்கட் பணத்தை கொடுக்கும் காட்சி மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கான சாட்சி.
காளி வெங்கட்டின், மகன், மகனின் காதலி, காளி வெங்கட்டின் நண்பர் ஆகியோரும் சிறப்பு.
டீக்கடைக்காரன் பாண்டியாக கருப்பு கலகலப்பு. காளி வெங்கட் மனைவி லோகியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இவர்களுடன் திருடர்களாக ஆனந்த், ஜெய், தேவா மற்றும் சங்கிலி நால்வரும் கலகலப்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.
ஒரு சினிமா என்றால் காதல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா.?
காதலர்கள் பாண்டி & ஜோதி இருவரும் கச்சிதம்.
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷ் நம்மை மதுரைக்கு அழைத்துச் சென்றது போல ஒரு உணர்வு. அந்த மக்கள் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளார்.
தீசனின் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது எனலாம். எடிட்டர் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் சிறப்பு.
இயக்குனர் ரா.வெங்கட்டிற்கு இது முதல்படம் என்று அவரே சொன்னால் கூட நம்மால் நம்ப முடியாது. அப்படி ஒரு நேர்த்தியான படைப்பை கொடுத்திருக்கிறார்.
என்னதான் நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று ஆயிரம் பேர் சொன்னாலும் ஏதோ ஒரு நல்லவர், ஏதோ ஒரு மனிதநேயமிக்கவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ‘கிடா’ போன்ற படங்களே உதாரணம்.
Kida movie review and rating in tamil