தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்… இயற்கையின் முக்கியத்துவத்தை மறுபிறவி, பழி வாங்கல் என திகிலோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
கதைக்களம்..
அழகம் பெருமாள் FINE ARTS கல்லூரியை நடத்தி வருகிறார். அங்குள்ள விடுதியில் 1013 என்ற அறையில் தங்கி படித்து வருகிறார் நாயகன் வெற்றி.
அந்த அறையில் தொடர் தற்கொலைகள் நடக்கிறது. ஒரு பட்டாம் பூச்சி பறந்துவரும் போதெல்லாம் இந்த சம்பவம் நடப்பதை அறிகிறார் வெற்றி. அப்போது தன் சிறுவயது தோழி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு தன்னுடைய யூடிப் சேனலுக்கு டாக்குமெண்டரி படம் எடுக்க வருகிறார்.
அப்போது அந்த தொடர் தற்கொலைகள் குறித்தும் அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது குறித்தும் ஸ்மிருதியிடம் சொல்கிறார் வெற்றி.
எனவே இவர்கள் இணைந்து சில ஆராய்ச்சிகளை செய்து அந்த தற்கொலைக்களுக்கான காரணங்களை தேடுகின்றனர்.
வெற்றி அதை கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க என்ன காரணம்? அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
நாயகனாக ஜீவி படத்தில் நடித்த வெற்றி நடித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. தன் கேரக்டரில் நிறைவு.
ஆனால் இவரைப் போன்ற நடிகர்கள் ஏன் தாடியை எடுப்பதில்லை என்று தெரியவில்லை. தாடியுடன் இருப்பதால் இவரை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. (எல்லாம் மாணவர்களுமே இப்போது தாடியுடன் தான் இருக்கிறார்கள் என்பது வேறுகதை.)
வண்ணாத்திப்பாறை என்ற அழகிய கிராமத்திற்கு ஏற்ப மிக அழகாக இருக்கிறார் அனு சித்தாரா (இவர் மலையாள சினிமாவில் பிரபலம்). தன் உருண்ட விழிகளால் நம்மை ரசிக்கவும் வைக்கிறார். அழவும் வைக்கிறார்.
ஆனால் இவர் மட்டும் இவ்வளவு அழகாக சிகப்பாக இருக்கிறார். மற்ற மனிதர்கள் கறுப்பாக அழுக்காக இருக்கிறார்கள். எனவே அந்த கிராமத்து மனிதர்களுடன் இவரது கேரக்டர் ஒட்டவில்லை.
ஸ்மிருதி வெங்கட் அழகான திறமையான நடிகை. தடம் மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்தவர் இந்த ஸ்மிருதி. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளார்.
வெற்றிக்கும் ஸ்மிருதிக்கும் உள்ள டூயட் பாடல் அழகு. ஆனால் ரொமான்ஸ் தான் பத்தவில்லை.
அழகம் பெருமாள் திடீரென மாறுவது திரைக்கதையில் ட்விஸ்ட். வேல ராமமூர்த்தி வழக்கம்போல தன் கேரக்டரில் மிரட்டல். இவரின் சுயசரிதையை எழுத வரும் அந்த நபரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
டெக்னீஷியன்கள்..
கலை இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே வேண்டும். ஜமீன்தார் காலத்திலும் சரி.. பைன் ஆர்ட்ஸ் காஜேஜ் என்பதாலும் அதற்காக நிறைய உழைத்துள்ளார். பழைய காலத்து பொருட்களை அடுக்கி வைத்து நம்மை அசரவைத்துள்ளார். சபாஷ் சார்.
த்ரில்லர் படங்கள் என்றால் இசையமைப்பாளருக்கு ஸ்வீட் சாப்பிடுவது போல. அதை சரியாக உணர்ந்து இசையை மிரட்டலாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோன் எதான் யோஹசன். பாடல்களும் ஓகே.
பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து பறக்க புறப்படும் காட்சி அழகோ அழகு. வண்ணாத்திப்பாறையை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். சில காட்சிகள் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்வது போல உள்ளது.
இன்றைய காலக்கட்டம்… அன்றைய ஜமீன்தார் காலம் என இரண்டையும் மாயக்கண்ணாடி மூலம் இணைத்திருப்பது நல்ல விஷயம்.
விவசாயத்தை காக்க விவசாயிகள் சிலர் தற்கொலை செய்வது போல காடுகளை காக்க அந்த மக்கள் இறப்பது நம்மை கண்கலங்க வைக்கும். ஆனால் எவரும் இறந்து எதையும் காப்பாற்றிட முடியாது. வாழ்ந்துதான் நமக்கு தேவையானவற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தொடர் தற்கொலைகள் நடந்தாலும் யாரும் எதையும் கண்டுக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்ப்பது சரியில்லை தானே. ஒரு போலீஸ் கூட வரவில்லையே. இதுபோன்ற லாஜிக்கை கவனித்திருக்கலாம்.
கதை சொன்ன விதத்தில் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஆர்ட்.. ஒளிப்பதிவு… இசை.. நடிகர்கள் என கவனம் செலுத்திய இயக்குனர் இன்னும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அந்த அறையில் உள்ளவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்பது என்ன காரணமோ? தெரியலையே. அவர்கள் செக்ஸ் வைப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு இந்த பிரச்சினை ஏன்.? அவரை குறிவைப்பது ஏன்.?
இறுதியாக இயற்கையை அழித்துவிட்டால் நமக்கு இன்பம் ஏது? என கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.