தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒரு நொடி விமர்சனம்… 3.75/5..
ஒரு நொடி என்பது வாழ்க்கையில் சாதாரணமாக விஷயமாக சாதாரண மனிதனுக்கு தோன்றலாம்.. ஆனால் அந்த ஒரு நொடி என்பது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களுக்கு பெரிய விஷயமாகும்..
அதுபோல ஒருவனின் வாழ்க்கையில் அந்த ஒரு நொடி என்ன செய்தது? அவனின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் இந்த படத்தின் கதை.
ஸ்டோரி…
தன் கணவர் எம்எஸ் பாஸ்கரை காணவில்லை எனவும் வேலராமமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி..
இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.
எம் எஸ் பாஸ்கர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என எந்த துப்பும் கிடைக்காத நிலையில் திடீரென நிகிதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவர் தீபாவின் மகள்.
இந்த கொலை தொடர்பான விசாரணையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் குழம்பி போகிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.
இந்த இரு வழக்குகளுக்கும் படத்தின் தலைப்பான ஒரு நொடி-க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன ஆனது? என்பதை சொல்லி த்ரில்லாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.
கேரக்டர்ஸ்…
தமன்குமார், நிகிதா, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
போலீஸ் வேடத்திற்கு பத்துப் பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்பது போல அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார் தமன் குமார். இவருடன் வரும் இதர போலீஸ் அதிகாரிகளும் அருமையான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
கணவரை தொலைத்த கலக்கம்.. காவல் நிலையம் செல்ல தயக்கம் என இரண்டையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி..
எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.. சின்ன வேடம் என்றாலும் முத்திரை பதித்து விடுவார். இந்த படத்தில் குறைவான காட்சிகளில் வந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் நண்பராக வரும் கஜராஜன் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகி நிகிதா… பாசம் பதட்டம் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆண்கள் மட்டுமே திரையில் காட்டப்பட்ட போது இவரின் முகம் நமக்கு ஆறுதலை தருகிறது..
நிகிதாவின் அப்பா நடிப்பு ரசிக்க வைக்கிறது… அம்மா தீபா ஷங்கரின் நடிப்பு கவனிக்க வைத்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்..
முடி திருத்தும் கலைஞராக வரும் விக்னேஷ் ஆதித்யா கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை கதையில் உண்டாக்குகிறது.
டெக்னீசியன்ஸ்…
கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்..
பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘கொல்லாதே….’ என்ற பாடல் கதையின் உணர்வை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு..
சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை க்ரைம் திரில்லருக்கான உணர்வை ஒவ்வொரு நொடியும் தந்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரித்தீஷ் தன்னுடைய கேமரா கோணங்களில் நம்மை படபடக்க வைத்து நகர்த்தி இருக்கிறார்.
முழுக்க முழுக்க ஒரு நொடியை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார்.. எந்த இடத்திலும் வேறு எங்கும் கதை செல்லாத வண்ணம் நாயகன் நாயகி எனக் கதைகளை திசை திருப்பாமல் சீட் நுனியில் நம்மை உட்கார வைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.
நாம் இதுவரை பார்த்த பெரும்பாலான படங்களில் ஒரு கொலை என்றால் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். ஆனால் எதிர்பாராத ஒரு விஷயத்தை வைத்து ஒரு நொடி-யை இயக்குனர் சொன்ன விதம் அருமையோ அருமை..
இன்ஸ்பெக்டர் தமன்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவே படத்தை நகர்த்தி இருப்பது ஒரு கேள்விக்குரி தான்.. இவருக்கு மேலே உயர் அதிகாரிகள் எவருமே இல்லையா?
முதலில் சந்தேக வளையத்துக்குள் வரும் வேலராமமூர்த்தி இறுதியில் என்ன ஆனார் என்பதற்கான விடை எங்கும் இல்லை.
அவரைப்போல மிரட்டல் அரசியல்வாதியாக காட்டப்படும் பழ கருப்பையாவின் கேரக்டரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் தொலைந்து விடுகிறது.?
எந்த ஒரு திரைக்கதையாக இருந்தாலும் அது ரசிகனுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.. இந்த படத்தில் கொலையாளி அவரா இவரா என நம்மையும் யோசிக்க வைத்து படத்துடன் ஒன்றை வைத்து பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.
மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
ஆக ஒரு நொடி.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்
Oru Nodi movie review