தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்… அண்ணன் தம்பி பாசக்கதையை ஆனந்தமாக சொல்ல வந்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.
கதைக்களம்..
திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பெரிய குடும்பம். இதில் பெரிய ஆம்பளை (ஜோ மல்லூரி). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன் உள்ளிட்ட மகன்கள்.
இதில் சரவணன் மகன் கௌதம் கார்த்திக், மகள் வெண்பா.
இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, செளந்தரராஜா உள்ளிட்ட மகன்கள். தன் அண்ணன் சரவணன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ளார் சேரன்.
இந்த குடும்பத்தின் மூத்த பெண் வெண்பாவுக்கு திருமணம் நடக்கிறது. சில மாதங்களில் கர்ப்பமாகிறார் வெண்பா.
வெண்பாவின் குழந்தை தங்கள் புதிய வீட்டில் பிறக்க வேண்டும் என நினைக்கிறார் சரவணன்.
எனவே தன் அண்ணனுக்காக தங்கள் குடும்ப நிலத்தை கொடுக்கிறார் சேரன்.
சரி.. நிலம் உன்னோடது. வீடு நான் கட்டுகிறேன். நாம் அனைவரும் இங்கேயே பெரிய வீடு கட்டி வசிக்கலாம் என்கிறார் சரவணன். அதன்படி வீடு கட்டும் பணி நடக்கிறது.
இந்த கட்டத்தில் குடிக்காரன்களான செல்லா மற்றும் சௌந்தர்ராஜா மூலம் அந்த குடும்பத்தை பிரிக்க நினைக்கிறார் வில்லன் டேனியல் பாலாஜி.
அதன்படி குடும்பத்தில் சண்டை பிறக்கிறது. சொத்தை பிரிக்க சொல்கின்றனர். வீடு கட்டும் பணி நிற்கிறது.
டேனியல் போட்ட திட்டம் என்ன..? அண்ணன் தம்பி சண்டை என்னாச்சு.? வீடு கட்டும் பணி நிறைவடைந்ததா.? வெண்பா பிரசவம் எங்கு நடந்தது என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கௌதம் மற்றும் சேரனை படத்தின் 2 நாயகர்கள் எனலாம். ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கௌதம் பாஸ் மார்க் பெறுகிறார். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளில் சொதப்பல். முகபாவனைகளே இல்லை.
மாபெரும் இயக்குனர் சேரன் இதில் முத்துப்பாண்டியாக நடித்திருக்கிறார். எதற்காகவும் அண்ணனை விட்டுக் கொடுக்காத இவரை பார்க்கும்போது இப்படி ஒருவர் கிடைக்கமாட்டாரா? என ஏங்க வைக்கிறார். அண்ணனுக்காக தன் மனைவியை அதட்டுவதும் ரசிக்க வைக்கிறது.
சேரனின் மனைவியாக சூசன். (மைனா புகழ்).. முதலில் அமைதியான சூசன் பின்னர் கணவனை மிரட்டுவதில் சூறாவளி சூசன்தான். (மைனா முதல் ஆனந்தம் விளையாடும் வீடு வரை..)
நாயகர்களை போல படத்தில் 2 நாயகிகள் எனலாம். ஷிவாத்மிகா மற்றும் வெண்பா…
நல்ல உயரம்.. நல்ல உடல்வாகு.. நல்ல நடனம் என ஷிவாத்மிகா கவர்கிறார்.
இந்த படத்தின் கதையே வெண்பாவின் பிரசவத்தை மையப்படுத்தியே நகர்ந்துள்ளது. எனவே செல்வி கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் வெண்பா. தாவணியிலும் சரி.. சேலையிலும் சரி.. அம்புட்டு அழகு.
எல்லா பிரச்சினைக்கு நான்தான் காரணம் என வெண்பா அழும்போது நம்மையும் அழவைத்துவிடுகிறார்.
சௌந்தர்ராஜா மற்றும் செல்லா (அழகர்) அண்ணன் கேரக்டர் சூப்பர். இருவரும் ரியல் குடிகாரர்களாக அசத்தியுள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்டு குடும்பத்தை பிரிப்பதில் வல்லவர்களாக தெரிகின்றனர்.
பல படங்களில் மிரட்டலாக பார்த்துள்ள சரவணன் இதில் சாந்த சொரூபியாக அசத்தியிருக்கிறார். இவரின் மனைவியாக மௌனிகா நடிப்பில் கச்சிதம்.
ஜோ மல்லுரி மற்றும் நக்கலைட் தனம் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் ஓகே.
டேனியல் பாலாஜி மற்றும் நமோ நாராயணன். திட்டம் போடுவதில் கில்லாடிகள். சிங்கம் புலி காமெடி பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை. இவரும் மொட்டை ராஜேந்திரன் செய்யும் டபுள் மீனிங் காமெடி தேவையில்லை.
மொட்டை ராஜேந்திரன் மதுமிதா மற்றும் டபுள் பொண்டாட்டி காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர் ஸ்ரீகாந்த்.
மற்றொரு அழகு சித்தியாக சிந்துஜா.. அளவான நடிப்பு. மேஸ்திரியாக சூப்பர் குட் சுப்ரமணி. வாய்பேச முடியாத முனீஷ்ராஜ் நடிப்பு அருமை. இவரின் மனைவி சுபாதினி நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
ஸ்ரீபிரியங்காவை நாம் பார்ப்பதற்குள் மின்னல்போல காணாமல் போகிறார். பின்னர் வருகிறார். ஆனால் படம் முழுக்க பெரும்பாலும் ஆரஞ்ச் கலர் தாவணியில் வருகிறார் ஏனோ..? இவரின் அம்மாவாக சுஜாதா.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஐடி அண்ணனாக சினேகன். சித்தப்பா விக்னேஷ்க்கு பெரிதாக வேலையில்லை.
டெக்னீஷியன்கள்…
ஹரி தினேஷின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. பொர்ரா பாலபரணியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கிறது. கிராமத்து பசுமையை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.
சித்துகுமாரின் இசையில் பாடல்கள் பெரிய பலம். அதிலும் “சொந்தமுள்ள வாழ்க்கை…” பாடல் குடும்பங்களின் பேவேரைட் பாடலாக மாறும்.. ஆனால் இதே பாடல் 2-3 முறை வருவது தேவையா? சந்தோஷமான பாடல் சோகமான காட்சிகளிலும் வருகிறது. வரிகளை மாற்றி இன்னும் சோகமாக கொடுத்திருக்கலாம்.
ஜிவி பிரகாஷ் மற்றும் ஷிவாங்கி பாடியுள்ள.. என் உசுருப்புள்ள பாடல்.. அழகான மெலோடி.. இருவரின் குரல்கள் நல்ல தேர்வு.
கட்டி கரும்பே… சாங் டான்ஸ் சூப்பர். (தினேஷ் ராதிகா மாஸ்டர்ஸ் செம…)
இயக்கம் பற்றிய அலசல்…
இன்றைய நவீன காலத்தில் பல குடும்பங்களில் ஒரு குழந்தையே உள்ளது. எனவே பலருக்கு அண்ணன் தம்பி உறவுகளின் அருமை தெரிவது இல்லை. இந்த படத்தை பார்த்தால் பலருக்கு அதுபுரியும்.
இவ்வளவு ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை முழுவதுமாக காட்டியிருக்கலாம். சரவணன் விபத்து… கௌதம் சண்டை.. வெண்பா பிரசவம்.. என திடீரென முடித்திருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.
அதே சமயம் கூடி வாழ்ந்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதையும் படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளுக்குள் விளக்கியுள்ளார் இயக்குனர். நந்தா பெரியசாமி.
படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது. பத்திர பதிவு… வலது கை விரல் சாட்சி கையெழுத்து ஆகியவை மட்டுமே ரசிக்க வைக்கிறது.
சிங்கம் புலி மொட்டை ராஜேந்திரனுக்கு ஆகியோர் இருப்பதால் படத்தில் கொஞ்சம் நகைக்சுவையை வைத்திருந்தால் குடும்ப சுவை கூடியிருக்கும்.
ஆக.. இந்த ஆனந்தம் விளையாடும் வீட்டில் என்றும் பேரின்பமே..
Anandham Vilaiyadum Veedu movie review and rating in Tamil