ரஜினி தலைவர்னா காமராஜர் யாருடா.? மிக மிக அவசரம் இசை விழாவில் சீறிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் ஜெகன்நாத் பேசும்போது…

“ஒரு நாள் சுரேஷ் காமாட்சியிடம் பேசும்போது இப்படி பெண் காவலர்கள் பற்றிய ஒரு கதை மனதில் உருவானதை அவரிடம் கூறினேன்.. அவருக்கு இந்த கதை பிடித்துப் போகவே நானே இயக்குகிறேன் என கூறினார்.

எனது குருநாதர் இயக்குனர் சேரனுடன் ராமன் தேடிய சீதை படத்தை தொடர்ந்து ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 10 வருடங்களாக பேசாமல் இருந்தேன் அப்படிப்பட்ட சேரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு மிக அருமையான கதை என வாழ்த்தியது மிகப் பெருமையாக இருக்கிறது..

இதற்கு முன்பு என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்த போது அண்ணன் சீமான் என்னை அழைத்து திட்டினார்.

ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகச்சரியான கதையை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளதாக பாராட்டினார்..
நான் எந்த கதை எழுதினாலும் அதன் முதல் உரிமை சுரேஷ் காமாட்சிக்கு தான்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு பெண் காவலர் என்ன பாடுபடுகிறார் பணிச்சுமையின் காரணமாக அவர் மனம் எப்படி எல்லாம் கொந்தளிக்கிறது என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.

இதை பார்த்தபோது நம் வீட்டுப் பெண்கள் இந்த அளவுக்கா கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நாயகி ஸ்ரீ பிரியங்கா மிக அழகாக அந்த கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார்.

நானும் சுரேஷ் காமாட்சியும் காரில் வந்தபோது இந்த படத்தை வாழ்த்தி பேசிய ஆர்ஜே. பாலாஜியிடம் போனில் பேச நேர்ந்தது. அப்போது என்னுடன் சுரேஷ் காமாட்சி என்கிற கலகக்காரனும் இருக்கிறான் பேசு என கொடுத்தேன் அவர் சுரேஷ் காமாட்சியிடம் பேசியதுபொது என்ன 2 தீவிரவாதிகளும் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள் என எங்களுக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்திவிட்டான்.

உண்மைதான்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நாங்கள் தீவிரவாதிகள்தான்” உணர்ச்சி பொங்க பேசினார்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்.

படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.

சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்.

இயக்குனர் சேரன் பேசும்போது, “சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்..

ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம்.. ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.

இந்த படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன்.. காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை..

அவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத் என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காக பத்து வருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.. ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.. வருத்தம் மட்டும் தான் இருந்தது.. அதுவும் போய்விட்டது..

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்ததும் அதில் இடம்பெற்றுள்ள நல்லதொரு வீணை பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன்..

பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது.. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன்.. அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார்..

அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப்பொருத்தமான பாடலாக இருக்கும்.
இந்த படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன்..

காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.

குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்” என கூறினார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது.. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது.

பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரியவருகிறது.

தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்.

நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன் ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது…

இயக்குனர் ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது.. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.

இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.

இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.

ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்..

அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே” என கூறினார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது…

“நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு எல்லா முகமும் உண்டு.. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான்.

இந்த படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன்.. ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன்.. அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.
எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளை பேசுகிறான் என்கிறார்கள்..

பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை.. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான்.. அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்களே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார்.

வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா..

வழக்கு எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன் அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம்.

அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள்.. அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம்..

இந்த தீ இன்னும் அணையவில்லை.. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள்.. அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன..

தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம்

இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்” என்று கூறினார் பாரதிராஜா

பொன்னியின் செல்வன்: எம்ஜிஆர்-கமல் கை விட்டதை சௌந்தர்யா ரஜினி முடிப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன்.

இதனை திரைப்படமாக தயாரிக்க பலர் முயன்றனர்.

குறிப்பாக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் விரும்பினார். அதன்பின்னர் சிவாஜி கணேசன் அவர்களும் நடிக்க விரும்பினார்.

இவர்களுக்கு பிறகு கமல்ஹாசனும் முயற்சித்தார். ஆனால் ஏனோ அது நடைபெறவில்லை.

தற்போது மணிரத்னம் தனது அடுத்த படமாக பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.

ரூ. 300 கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் பொன்னியின் செல்வன் கதையை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சௌவுந்தர்யா ரஜினியின் மே 6 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்துடன் இணைந்து, இந்த நாவலை, வெப் சீரிஸாக பல பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.

இந்த பிரபலமான வரலாற்று வலைத் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற இருக்கிறார் சவுந்தர்யா.

இந்த மெகா காவியத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்குகிறார்.

இவர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சவுந்தர்யாவுடன் இணைந்து உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் அறிவித்து விட்டு முடியாமல் போனதை தற்போது சவுந்தர்யா கையில் எடுத்துள்ளார். அவரை வாழ்த்துவோம்.

தலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உலக தலித் திரைப்பட விழா விரைவில் ஒன்று நடைபெற உள்ளதாம்.

இது அங்கு நடப்பது முதன்முறை என கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் உலக அளவில் பலமொழி படங்களும் திரையிடப்பட உள்ளன.

இதில்.. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற தமிழ் ஆவணப் படமும் திரையிடப்படுகிறது.

கேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக சொல்லப்போனால் அதை விட அதிகமாக சக்கை போடு போடுகிறது தமிழ் படங்கள்.

இதனால் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.

ரஜினியின் கபாலி, பேட்ட, விஜய்யின் மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்கள் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

இதனால் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி, கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ் படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தவுள்ளனர்.

அதாவது இனிமேல் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே தமிழ் படங்களை வெளியிடலாம்.

அதேபோல மலையாள படங்கள் அதிகபட்சமாக 160லிருந்து 170 தியேட்டர்கள் வரை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்.

பெரிய படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்களை ஒதுக்கி கொள்ளலாம் என்ற முடிவை விரைவில் அமல்படுத்தஉள்ளனர்.

மார்ச் 10ல் திருமணம்..: 21 வயதாகும் சாயிஷா மணக்கும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடினாலும் அதில் கலந்துக் கொண்ட பெண்களை நிராகரித்தார் நடிகர் ஆர்யா.

அதன்பின்னர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த போது நடிகை சாயிஷா உடன் காதல் கொண்டுள்ளார்.

அந்த காதலை சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்த போது நன்றாகவே வளர்த்துள்ளார்.

அதன்படி தங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

வருகிற மார்ச் 10ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது 38 வயதாகிறது. சாயிஷாவுக்கு 21 வயது ஆகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் உறவினர் சாயிஷா என்பது இங்கே கூடுதல் தகவல்.

இருவரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்ற ’அப்பா காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் குறும்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்று இருக்கும் அதே வேளையில் இயக்குனர் ஆர்வா’விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வளர்ந்து வரும் இயக்குனர் ஆர்வா இந்த குறும்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இவர் இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார்…

இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகர் மற்றும் ஹரிஷ் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.

இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர்… அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் சிகரம் தொடு திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்தது இதுவே முதல் முறை.

அதற்கு காரணம் இயக்குனர் ஆர்வா, ஜாக்கிசேகர் திறமையின் மேல் வைத்த நம்பிக்கை எனலாம்.

இந்தி திரைப்படம் பொறுப்புள்ள நவீனகால அப்பா பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.

இந்த திரைப்படம் யூடியூபில் கடந்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு 70 வது குடியரசு தினத்தன்று வெளியானது. 26 நிமிஷம் ஓடும் இந்த குறும்படமானது வலையேற்றிய ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் கமெண்டுகளை பெற்றுள்ளது.

எதிர்கருத்துக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அதற்கு காரணம், படத்தில் நடித்த ஜாக்கி சேகரின் அப்பா கேரக்டர் போல தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று படம் பார்த்த ரசிகனை ஏங்க வைத்திருக்கிறது.

இதுபற்றி இயக்குனர் ஆர்வாவிடம் கேட்டபோது…

எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 6 லட்சம் பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாக பயணித்திருப்பதாக எண்ணுகிறேன்.

பாஸிட்டிவ் கமெண்டுகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நெகட்டிவ் கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தமிழ் காண்டம் என்பதை குறிக்கும்.

உதாரணத்திற்கு சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம்.
பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள்.

இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை என்று இயக்குனர் ஆர்வா, காண்டத்திற்கான விளக்கத்தை தெரிவிக்கிறார்.

சாம் இமயவனின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்த அதே வேளையில் ஏஆர் ரனோஜ்’ன் இசையும் பின்னனி இசையும் இந்த குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகது.

படத்தொகுப்பை பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்கின்றார்..
மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. தியாகராஜன் கவனித்துக்கொள்ள ரெட் ஸ்டுடியோ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர்.

விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்துக்கு தயாரிப்பு செலவாக சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து இந்த குறும்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Appa Kaandam 2019 Tamil Short Film crossed 5L views in 5 days

More Articles
Follows