தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் இணைந்து நடித்துள்ள படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.
இயக்குனர் விக்னேஷ் ஷா பி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் நாளை பிப்ரவரி 24 இல் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் பேசுகையில்…
“திரைப்படங்கள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதித்திருக்கிறேன். ‘ரோட்டி கபடா மக்கன்.. உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்.’ இந்த மூன்றும் இருந்தால் மனித வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்றொரு தத்துவம் இருக்கிறது.
இது அனைத்து மக்களிடத்திலும் பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும், இதையும் கடந்து ஒரு சமுதாய அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நமக்குள் எவ்வளவு அழுத்தங்களும்.. நெருக்கடிகளும்.. உண்டாகின்றன என்பது குறித்தும் மிர்ச்சி சிவாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.
ஒரு சிறிய அடையாளத்திற்காக அல்லது நம்முடைய இலக்கை அடைவதற்காக.. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பல வகையிலான ஓட்டங்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்.
ஒரு மருத்துவராக இது குறித்து என்னிடம் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளிடம் பேசும் போது.. ‘ஐம்பது வயது வரையிலும் நாம் நிறைய ஓடுகிறோம். எந்த துறையினராக இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
இந்த ஓட்டத்தின் போது நாம் நம்முடைய ஆரோக்கியத்தை தவற விட்டு விடுகிறோம். ஆனால் ஐம்பது வயதிற்கு பிறகு, ஒரு மருத்துவரை தேடி, சந்தித்து, அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்பதற்காக கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு தேவையான விசயம் தான் நகைச்சுவை எனும் உணர்வு. நகைச்சுவை என்ற உணர்வு இல்லாத போது வாழ்க்கை வற்றி விடுகிறது.’ என குறிப்பிடுவேன்.
பெர்னட் ரஸ்ஸல் எனும் உளவியல் தத்துவ மேதை..,“ரோட்டி கபடா. மக்கன் ஆகிய மூன்றையும் கடந்து கிடைக்கும் சமூக அங்கீகாரம் தான் மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம்” என குறிப்பிடுகிறார்.
தற்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். தயாரிப்பாளர் குமார் படத்தை தயாரித்திருக்கிறார். விக்னேஷ் இயக்கி இருக்கிறார். சிவா நடித்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள்.
இவை அனைத்தின் பின்னணியிலும் ஏதோ ஒரு காரணம் இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அனைவரும் இயந்திரம் அல்ல.. இதனை இழுத்து பிடித்து நிறுத்த ஒரு அழகான உணர்வு தேவைப்படுகிறது.
அந்த அழகான உணர்வும், நகைச்சுவையும் இந்தத் திரைப்படம் உங்களுக்கு வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்காகத்தான் எங்கள் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும்.
இங்கு தயாரிப்பாளர் பேசுகையில் ‘லாஜிக் தேவையில்லை’ என குறிப்பிட்டார். உண்மையில் சில விசயங்களுக்கு லாஜிக் தேவையில்லை.
தமிழ் சினிமா ஆக சிறந்த நகைச்சுவை கலைஞர்களை நமக்கு அளித்திருக்கிறது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தொடங்கி சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் .. முதல் தற்போது வரை நிறைய நகைச்சுவை கலைஞர்களை வழங்கி இருக்கிறது.
இவர்கள் அனைவருக்கும் ஃபோர்தாட் எனப்படும் எதிர்காலம் குறித்த சிந்தனை இருந்தது. அதாவது மன அழுத்தத்தை உடைப்பது மட்டுமே நகைச்சுவை கலைஞர்களின் பணி அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
என். எஸ். கே, 1950- 1960களில் அவர் நடித்த படங்களில்.. ஒரு தீர்க்கதரிசியை போல் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தை கணித்து சில விசயங்களை அவர் பேசியிருக்கிறார். அவர் ஒரு படத்தில் ‘பட்டனை தட்டினால் சட்டினியும் இட்டிலியும் தட்டுல வந்து விழும்’ என ஒரு பாடலை அவர் எழுதிப் பாடியிருக்கிறார். அது போல் தற்போது நடக்கிறது அல்லவா..!!
சந்திரபாபு, “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என பாடியிருப்பார். இந்த பாடல் நம்முடைய வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மறைந்த சோ, எஸ் வி சேகர் போன்ற நாடக கலைஞர்கள் அரசியல் ரீதியான கேலி கேள்விகள் மூலம் நமக்குள் அரசியலை உணர்த்தியிருக்கிறார்கள்.
ஏராளமான சிந்தனையாளர்கள், தங்களுடைய நகைச்சுவையின் மூலம் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.
பின்னணி பாடகர் மனோவுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருப்பது, கடவுள் எனக்களித்த ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த ‘டபுள் எஸ் டபுள் எஸ்’ படத்தில் எதிர்காலம் குறித்த சிந்தனை இடம்பெற்றிருக்கிறது.
இப்படத்தின் இயக்குநர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து சிந்தித்திருக்கிறார். இன்றைய சூழலில் நாம் மனிதர்களுடன் பழகுவதற்கு எவ்வளவு தயங்குகிறோம். இந்த திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விசயத்தை ஆடம்பரமான ஜோடனைகள் எதுவுமில்லாமல்.. யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பின்னணியில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானவர்களின் உழைப்பு இருக்கிறது. அதனால் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
Producer Dr Ram Thilak talks about Comedy Actors of Tamil Cinema