தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்…
எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ள ‘வதந்தி’ சீசன் 8 தொடர்களாக உருவாகி உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு வதந்தி செய்தியாக பரவுகிறது.. அதன் பின்னால் பல உண்மைகளும் பல மர்மங்களும் நிறைந்து இருக்கிறது. இறுதியில் அந்த வதந்தி செய்தியானது எப்படி? அதில் உண்மை என்ன? என்பதே படத்தின் ஒன்லைன்.
கதைக்களம்…
அழகு நிறைந்த கன்யாகுமரியில் படத்தின் கதை தொடங்குகிறது.
அங்கே அடர்ந்த காடின் அருகே ஒரு படத்தின் சூட்டிங் நடக்கிறது. அப்போது இளம் பெண்ணின் சடலம் கிடைக்கிறது.
அப்படத்தின் ஹீரோயின் தான் இப்படி சடலமாக என உறுதி செய்கிறார் இயக்குனர்.
இதனையடுத்து அந்த செய்தி காட்டு தீயாய் பரவுகிறது. ஆனால் அதன் பின்னர் நான் உயிரோடு தான் இருக்கிறேன் என சொல்கிறார் நாயகி.
இதனால் மக்களும் காவல்துறையும் குழப்பம் அடைகின்றனர்.
அப்படி என்றால் இறந்து கிடந்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.
இது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் எஸ் ஜே சூர்யா.
அந்த பெண் வெலோனி (Valonie) என தெரிய வருகிறது.. முதலில் பரவிய வதந்தி இப்போது தலைப்பு செய்தியாகிறது.
விடுதி நடத்தும் லைலாவின் மகள் தான் வெலோனி.
அழகான அந்த பெண்ணை கொன்றது யார் காதல் பிரச்சனையா பண பிரச்சனையா கற்பழிக்கப்பட்டாரா பழிதீர்க்கப்பட்டாரா என்ன நடந்தது எப்படி நடந்தது ஏன் நடந்தது என்பதை இந்த வதந்தி அவர்கள் விடுதியில் தங்கியவர்கள் யார் யார் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் யார் வேண்டாதவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரிக்கிறது.
வெலோனிக்கு காதலன் யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்டாரா? காதலில் பிரேக் அப் ஆனதால் கொல்லப்பட்டாரா?
ஒருவேளை நிறைய பாய் பிரண்டு இருந்ததால் பிரச்சனை உருவானதா? என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நகர நகர ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு புதிய கோணத்தில் நகருகிறது.
இறுதியில் இது வெறும் வதந்தியா.? தலைப்புச் செய்தியா? என்பதே படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
நாயகன் எஸ் ஜே சூர்யாவுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை உண்டாக்கும். சிறப்பான நடிப்பை கொடுத்து நம்மை அசர வைத்துள்ளார். இந்த கொலை வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என அவர் படும் வேதனைகள் செம.
முக்கியமாக தண்ணி அடித்து விட்டு அவர் பேசும் வசன காட்சி கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீள்கிறது. அதை எந்த விதத்திலும் போர் அடிக்காமல் அசத்திவிட்டார்.
அந்த காட்சி முடிந்தவுடன் ஸ்ருதி வெங்கட் காட்டும் ரியாக்ஷன் வேற லெவல். அதனை அடுத்து தொடரும் குடும்ப காட்சிகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன.
எஸ் ஜே சூர்யா மனைவியாக ஸ்மிருதி வெங்கட் கன்னியாகுமரி பாஷையில் வெளுத்து கட்டியுள்ளார். பெண்களுக்கே உரித்தான ஒரு எதிர்பார்ப்பு ஒரு ஏக்கம் ஒரு பாசம் என ஸ்மிருதி சிலிர்க்க வைக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் விவேக் பிரசன்னாவும் தன் பங்கை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். இந்த ஏரியாவுல போண்டா டீ தரும் சுகத்தை பொண்டாட்டி கூட தர மாட்டா என அவர் கொடுக்கும் விளக்கம் வேற லெவல்.
நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழகாக பேசி நம்மை கவர்கிறார் லைலா. கிளைமாக்ஸ் இல் இவரது வேடம் பயங்கர கைத்தட்டலை இள்ளும்.. வெலோனி கேரக்டரில் நடித்துள்ள சஞ்சனா ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் போட வைக்கிறார்.
நான் அழகாக பிறந்தது குற்றமா? ஏன் அவர் கலங்கும் போது நம்மையும் அழ வைக்கிறார்.
கபடதாரி படத்தை இயக்கிய பிரதீப் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நம்மை மிரள வைத்துள்ளார். அதுபோல நாசரின் கேரக்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அவராக இருப்பாரோ என நம்மை திசை திருப்ப பார்க்கிறது திரைக்கதை. பாண்டியன் ஸ்டோர்ஸில் கலக்கிய குமரன் இதில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார். ஒருவேளை அவர் தான் கொலையாளியாக இருக்குமோ எனவும் நம்மை குழப்ப வைக்கிறார்.
டெக்னீஷியன்கள்…
படத்திற்கு ஒளிப்பதிவு பெரும்பலம். கன்னியாகுமரி காட்சிகளையும் காடு பகுதிகளையும் அழகான விடுதியும் என ஒவ்வொன்றையும் அழகாக தன் பிரேமில் படம் பிடித்து காட்டியுள்ளார் சரவணன் ராமசாமி.
இசையமைப்பாளர் சைமன் கேகிங் தன் பின்னணி இசையில் மிரட்டி விட்டார். இந்த வெப் தொடர் முடிந்து சில மணி நேரங்கள் ஆனாலும் அந்த பின்னணி இசை நம்மில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு இசையை அவர் கொடுத்துள்ளார்.
கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இதை ஒவ்வொரு எபிசோடாக பார்த்தால் போர் அடிக்காது. ஆனால் இந்த 8 எபிசோடையும் ஒரேடியாக உட்கார்ந்து பார்த்தால் இவ்வளவு நீளம் தேவையா? என தோன்றுகிறது.. 6 எபிசோடில் இந்த வதந்தி தொடரை முடித்து இருக்கலாம்.
சில காட்சிகளில் டிவிஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டதாக தெரிகிறது.
முக்கியமாக எழுத்தாளர் நாசர் கற்பனையில் எழுந்த ஒரு சின்ன கதை தேவையில்லாதது போல தோன்றுகிறது. அதை வெட்டி எறிந்து இருக்கலாம் எடிட்டர்.
அதுமட்டுமில்லாமல் கல்லூரி பெண்கள் காட்சிகள் எனத் தேவையில்லாத காட்சிகளை அகற்றி இருக்கலாம். இவை எல்லாம் ஒரு நீண்ட சீரியலுக்கான காட்சிகளாகவே தெரிகிறது.
இந்த வதந்தி வெப் தொடரை பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் முக்கியமாக கன்னியாகுமரி கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து எல்லோரையும் அந்தப் பகுதி மக்களாகவே நடிக்க வைத்து இல்லை வாழ வைத்து இருக்கிறார்.
ஆக… வதந்தி தொடர்… சிக்காத சிலந்தி