தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்….
நாயகி அனுஷ்கா. இவரது தாயார் ஜெயசுதா. பெற்றோரின் விவகாரத்தால் தன் அம்மாவுடன் வசிக்கிறார் அனுஷ்கா. இதனால் இல்லற வாழ்க்கையை வெறுக்கிறார் அனுஷ்கா.
ஒரு கட்டத்தில் அம்மா ஜெயசுதா மரணம் அடைய தனிமையில் தவிக்கிறார். ஆனாலும் தனக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்கிறார். எனவே தான் தாயாகி தனக்கு ஒரு துணை உருவாக்க விரும்புகிறார். ஆனால் அதன்படி திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்.
ஆணின் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார். இதன்படி விந்துவை தானம் (SPERM DONOR) செய்யும் ஆண்மகனை தேடுகிறார்.
இதற்காக சில நேர்முகத் தேர்வுகளையும் நடத்துகிறார் அனுஷ்கா. ஒரு கட்டத்தில் நாயகனை காண்கிறார். அவனுடன் நெருங்கி பழகி அவனின் விந்தணுவை பெற நெருங்கி பழகுகிறார்.
அனுஷ்காவின் நோக்கம் புரியாமல் அது காதல் என நினைத்து நாயகன் உருகுகிறார். ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. என்னுடன் உடலுறவு கொள்ளாமல் உனது விந்து மட்டுமே எனக்கு தேவை.
அதன் மூலம் நான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் என்ன ஆனது? அனுஷ்கா குழந்தை பெற்றுக் கொண்டாரா? நாயகன் ஒத்துக் கொண்டார்? ஒதுங்கினாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த திரைப்படம்.
கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…
இறுக்கமான பெண்ணாக தன் முடிவில் பிடிவாத குணம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா. இறுதிக் கட்டத்தில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்வுகளில் காட்டியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் காமெடியால் கலக்கி இருக்கிறார். Stand Up காமெடியனாக பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஆண் துணையில்லாமல் உடலுறவு கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என அவர் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் ரகம்.
காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதியை மெதுவாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் செய்திருக்கிறார். அதிலும் இரட்டை அர்த்த வசன காமெடிகள் காம நெடி அடிக்கிறது.
ரதன் இசையில் உருவான பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.. நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கும் மனதிற்கும் இதம்.
மலையாளம் மற்றும் தெலுங்கில் இதுபோன்ற கதைகள் வருவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் தமிழில் இதுபோல கதைகளை எடுக்க எந்த இயக்குனரும் முன்வருவதில்லை.
காரணம் ஹீரோ & ஹீரோயினும் தயங்கும் கதைக்களம் இது. இது போன்ற கதைகள் வருமேயானால் தமிழ் சினிமாவில் புதிய தளம் உருவாகும். வரவேற்போம்..
Miss Shetty Mr Polishetty movie review