தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மாமனிதன் விமர்சனம் : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் விமர்சனம் இதோ
கதைக்களம்..
பண்ணைபுரம் என்ற கிராமத்தில் ஆட்டோ ஓட்டுபவர் விஜய்சேதுபதி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. எந்த கட்டத்திலும் பொய் சொல்ல கூடாது என்பதை கொள்கையாக வைத்திருப்பவர்.
தன் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைக்க நினைக்கிறார். அந்த சமயத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. எனவே தன் ஊர் மக்களை அந்த பகுதியில் நிலம் வாங்க வைக்க முன்பணம் பெறுகிறார்.
ஆனால் அந்த தொழில் அதிபரும் ஒரு கட்டத்தில் தலைமறைவாகி விடுகிறார்.
இதனால் பணத்தை இழந்து அவமானப்பட்டு நிற்கிறார் விஜய்சேதுபதி.
அந்த தொழில் அதிபரை தேடி வேறு வழி இல்லாமல் கேரளாவுக்கு ஓடி ஒளிகிறார்.
அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை படத்தின் கதை.
கேரக்டர்கள்.
எதார்த்த நாயகனாக அலட்டிக்கொள்ளாத மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பாசம் நேர்மை கோபம் சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளில் பளிச்சிடுகிறார்.
நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு இல்லத்தரசியாக நடித்திருக்கிறார் காயத்ரி.
இவர்களின் குழந்தைகளும் நடிப்பில் கச்சிதம்.
இஸ்லாமிய நண்பனாக வரும் குருமூர்த்தி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார்.
விஜய் சேதுபதி கேரளா சென்ற பின் அங்கு சந்திக்கும் மனிதர்கள் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர். அழகான அனிகா மற்றும் ஜுவல் மேரி நடிப்பு பாராட்டுக்குரியது
டெக்னீஷியன்கள்..
முதன்முறையாக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் இணைந்து இசையமைத்துள்ள படம்.
அப்படியிருந்தும் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். ஆனால் பின்னணி இசை கேட்கும்படி உள்ளது.
வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி
படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமார் கேரளாவை மிக அழகாக காட்டியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதம்.
தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, நீர்ப்பறவை உள்ளிட்ட பல தரமான படங்களை கொடுத்தவர் சீனுராமசாமி.
இந்த படத்தின் திரைக்கதையில் சில திருப்புமுனைகள் கொடுத்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
தன் குடும்பத்தை காப்பவனே மாமனிதன் என கூறியிருக்கிறார். ஆனால் ஊர்மக்கள் முன்னிலையில் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டாமா.? க்ளைமாக்ஸ் காட்சியை அப்படி வைத்திருக்கலாம். ஓடி ஒளிந்தால் சரியாகுமா.? என்பதற்கான அர்த்தம் புரியவில்லை.
வழக்கம்போல குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அழகான படத்தை கொடுத்துள்ளார் சீனு ராமசாமி.
ஒரு கமர்சியல் வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது சீனு ராமசாமியின் அக்மார்க் முத்திரை.
ஆக மாமனிதன்… சுகமான சுமைகள்
Maamanithan movie review in Tamil