தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி.சிவா, காரகட்ட பிரசாத், சி.வி.குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி, பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி படத்தின் இசைத் தகட்டை வெளியிட, படக் குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர். பின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.
விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா.கா.பா.ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக் குழுவினரை மேடையில் ஏற்றி, ‘ஜுங்கா’வில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “ஜுங்கா’ என்றால் என்ன என்பதற்கு விளக்கவுரையாக படத்தில் ஒரு காட்சியை வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது.
இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. இந்த டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. ஆனால், சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் பிற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் இருக்கா.. இல்லையா..? என்று என்னிடம் கேட்பதைவிட ரசிகர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில் அதை ரசிகர்கள்தான் படத்திலிருந்து தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை வெறும் வசனமாக நினைத்துதான் பேசுகிறோம்.
படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன் லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக் கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார் யோகி…” என்றார்.
