தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இன்றைய ட்ரெண்டான வாட்ஸ்அப்பை மையமாக கொண்டு விவசாயத்தை பற்றி அலசி ஆராய்ந்துள்ள இப்படத்திற்கு கருணாஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.
இப்படத்தின் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…
“செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக பார்த்த பலர் இன்று பணத்திற்காக அத்தொழிலை செய்கின்றனர்.
ஆனால் விவசாயம் செய்யதான் இங்கே யாரும் இல்லை.
‘இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும்மய்யா.. நீ பட்டனம் போய் செட்டிலாகு என தங்களை பிள்ளைகளை விவசாயிகளே வெளியூறுக்கு அனுப்பி வைக்கும் நிலைமை உள்ளது.
சமூகம் சார்ந்த ஒருவன் ஒருவன் என்னவாக வேண்டும் என்கிற அந்தப் போராட்டமே இந்த ‘பகிரி’ படம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது….
“இந்த ‘பகிரி’ என்கிற பெயரே பிடித்திருந்தது. ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.
கம்ப்யூட்டர் என்ற சொல் கணிப்பொறி ஆனது. அதன்பின்னர் அழகாக கணினி என்று மாறியது.
நான் ‘அங்காடித் தெரு’ என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்றுகூட கேட்டார்கள்.
ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது. தற்போது பாண்டி பஜாருக்கு என்பது சௌந்தரபாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நான் என் படத்திற்கு ‘வெயில் ‘ என்று தலைப்பு வைத்தபோது கூட ஷங்கர் சார் வேண்டாம் என்றார். பின்னர்தான் ஒத்துக் கொண்டார்.
ஒரு படைப்பாளி பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல நல்ல செய்தி உள்ள படத்தையும் கொடுக்க வேண்டும்.
இப்போது மராத்தி, கன்னடத்தில் நல்ல படங்கள் வருகின்றன. எப்போதாவது இங்கே நல்ல படங்கள் வருகின்றன.
‘காக்கா முட்டை’ க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.
விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து ஹீரோக்கள் நடித்த படங்கள் தவிர மற்றவை ஓடுவதில்லை.
விவசாயம் என்பது ஒரு சாதி. ஆனால் அது இன்று அழிந்து வருகிறது.
ஜவஹர்லால் நேரு நம், இந்தியாவை விவசாய நாடாக்குவதற்கு பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.
கோ கோ கோலா 1 லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்னதான் கண்டு பிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ‘ஹெச் 2ஓ ‘ வை யாராலும் உருவாக்கிட முடியாது.
விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. காரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா?
பிரதமர் மோடி நாடு நாடாகப் சென்று தொழில் தொடங்க இந்தியா வாருங்கள் என்கிறார். இன்னும் 20 ஆண்டுகளில் உணவுக்காகக் கையேந்தும் நிலை வரும்.
சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்தோம். ஆனால் அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.