ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.

நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.

அறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

இளையராஜாவே போதும் நிறுத்திக்குங்க.. – முருகன் மந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு துறையில் அதீத அசாத்தியமான திறமையாளராக இருப்பது போற்றுதலுக்கும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் அற்புதமான திறமையாளர் என்பதற்காக அவர் செய்யும் மனிதாபிமானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத செயல்களை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது பைத்தியக்காரத்தனம்.

அவருக்கு இசை தவிர வேறோன்றும் தெரியாது என்பதெல்லாம் அறிவற்ற உளறல். விஞ்ஞானிகள் ஆய்வுக் கூடங்களில் சரியாக உறங்காமல் பல் விளக்காமல் குளிக்காமல் உடை மாற்றாமல் ஒன்றும் இரண்டும் கூட சரியாக போகாமல் ஆய்வில் மூழ்கி இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

சில திரைப்பட எழுத்து/விவாத வேலைகளுக்காக வெளியூரில் தங்கி இருந்த போது நானே கூட அப்படி இருந்திருக்கிறேன். நேரத்திற்கு எதையும் செய்யாமல்.

இளையராஜா என்ன அப்படி முடிவெட்டாமல் குளிக்காமலா இருக்கிறார்?

ஒரு நிகழ்வில் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் 10000 ரூபாய் டிக்கெட் இருக்கைகளில் அமர்ந்ததும் செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வந்து தண்ணீர் கொடுத்ததும் விழா ஏற்பாட்டில் உள்ள குறைபாடு.

ஏற்பாடு செய்த நிறுவனம் அதன் ஊழியர்கள் தவறு அது.

அவர்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தான் அது தவறு எனில் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஞானிகளே மனம் பிறழும்போது சராசரி மக்கள் மனம் பிறழ மாட்டார்கள், நியாயமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அனுபவ அறிவு போதாமை அல்லது அதீத நம்பிக்கை.

தண்ணீர் குடிக்கும் டம்ளர்களையே கட்டிப்போடுபவர்கள் மனிதர்கள். கோயில்களில் சிசிடிவி கேமரா வைப்பவர்கள் மனிதர்கள். அவ்வளவு தான் மனிதர்களின் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, மனிதர்களின் கடவுள் மீதான நம்பிக்கை எல்லாம்.

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுக்கு யார் யாரையோ இளையராஜா குற்றம் சுமத்துவதை பார்க்கும்போது, செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசும் போது, செக்யூரிட்டி பரிதாபமாக இளையராஜா முன் நிற்கும் போது,
செக்யூரிட்டி அவர் காலில் விழுவதை பார்க்கும் போது, அதைத் தடுக்க விரும்பாமல் இளையராஜா நிற்கும் போது…

போதும் என்று தோன்றுகிறது மதிப்பிற்கும் மகிழ்வுக்கும் உரிய இளையராஜா அவர்களே…
அந்த செக்யூரிட்டி தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட தமிழில் தான் பேசி இருப்பார். அது சபை நாகரிகம் மட்டும் அல்ல உங்கள் மீதான மரியாதையும் கூட.

எனக்குத் தெரியாத எந்த பிரபலம் கூடவும் புகைப்படம் எடுக்க விரும்பாத நான் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே ஒருமுறை வந்தேன்.

என்னுடன் வந்தவர்கள் வரிசையில் வந்து உங்கள் காலில் விழுந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் அப்பா அம்மா வீட்டு பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதாக நினைத்து கும்பிட்டிருக்கக் கூடும். எனக்கு அந்த பழக்கம் இல்லை.

ஆனால் அனைவரும் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள். சிலநொடி குழம்பினேன். ஆனாலும் காலில் விழவில்லை நான். கைகளில் முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

ஒருவர் தன் காலில் விழுந்து வணங்குதை விரும்புவதும் அதைத் தடுக்காமல் இருப்பதும் மனிதாபிமானம் அற்ற சமத்துவம் இல்லாத செயலாகவே நான் கருதுகிறேன்.

பாடகர் ஏசுதாசுக்கு பாடகர் எஸ்.பி.பி. ஒருமுறை பாதபூஜை செய்தார். அதுவும் அனைத்து மீடியாவையும் அழைத்து. அன்று முதல் இருவரது புகைப்படத்தையோ அல்லது அவர்களை நேரிலோ பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. அதிலும் யேசுதாசைப் பார்த்தால் சற்று கூடுதலாக.

அவ்வளவு மரியாதை பாசம் என்றால் தனியாக வீட்டில் செய்யலாமே. ஊருக்கு தெரிய செய்வது அசிங்கமானது மட்டும் அல்ல வரவேற்கத் தக்கதும் அல்ல. இதே அருவருக்கத்தக்க செயலை எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் உட்கார வைத்து மாணவர்களை பாதம் கழுவச் சொல்லி அதை புகைப்படங்கள் வீடியோ எடுத்து மீடியாக்களில் பகிர்ந்து பெருமை பீற்றினார்கள்.

அசிங்கம். கேவலம். சமத்துவத்திற்கு எதிரான மனித உரிமை மீறல் அது.

ஆக இளையராஜா அவர்களே… உங்கள் கூட இருப்பவர்கள் உங்களை ஓவராக துதி பாடினால் அவர்களை ஈவு இரக்கம் இன்றி வெளியேற்றுங்கள்.

உலகமே உங்களை கொண்டாடுவதை பலகோடி முறை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டிருப்பீர்கள். அதை எவரும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

என் பாடல்களால் தான் உங்கள் வாழ்க்கை, நான் இப்படி இருப்பது தெரிந்தும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்… என்று நீங்களே பேசுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனம். அது உங்களை சிறுமைப் படுத்தவே செய்யும். இசைஞானி என்கிற மனிதனின் இசைக்கு சிறுமை இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இளையராஜா என்கிற மனிதருக்கு சிறுமையே.

உங்களுக்கு இசையை தவிர வேறேதும் தெரியாது என்கிற பழைய பல்லவியை உங்கள் ஆதரவாளர்கள் திரும்ப திரும்ப பாடுவது அபத்தம்.

அப்படியா என்ன?

உங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? இதில் நீங்கள் ஆன்மீகவாதி என்று சொல்வது இன்னும் பொருத்தமற்றதாக இருக்கிறது.

ஆன்மீகம் செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுமா என்ன? அந்த தொனி அதிகார உளவியலின் வெளிப்பாடு.

பகுத்தறிவு பெறுங்கள் இசைஞானியே. உங்கள் நண்பர் கமலையே சமூக ஞானி என்கிறார்கள். நீங்களாவது உண்மையான சமூக ஞானியாக மாறுங்கள்.

நீங்கள் எங்களுக்கு தந்திருக்கும் இசை தமிழனின் கடைசி தலைமுறை வரை போதும். ஆமாம். தமிழனின் கடைசி தலைமுறை வரை உங்கள் இசையும் உங்கள் புகழும் உயிர்த்திருக்கும். ஏன் தமிழனும் தமிழ்நாடும் இல்லாமல் போனால் கூட உங்கள் இசை இருக்கும்.

ஆக எங்களுக்கு இதுவரை நாங்கள் பார்த்த இசைஞானி இளையராஜா போதும். நாங்கள் பார்க்க விரும்புவது இளையராஜா என்கிற சாதாரண இயல்பான மனிதரை.

உங்கள் நடவடிக்கைகள் விஷயத்தில் சாதியை இழுப்பவர்கள் அற்பமானவர்கள். அது முட்டாள்தனம். அதைத் புறந்தள்ளுவோம்.

ஆன்மீகம், கடவுள் பக்தி எல்லாம் வேண்டாம் என நான் கூற விரும்பவில்லை. ஆனால் பாவலரின் சகோதரன் நீங்கள். உங்கள் இசையின் தொடக்கமும் நீங்கள் அறிந்ததே.

உலக உழைக்கும் வர்க்கம் குறித்தும் இந்தியாவின் சாதியம் குறித்தும்
மதங்களின் கலாச்சாரங்களின் பெண்ணடிமை குறித்தும் தெளிவான புரிதல் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த இளையராஜா இப்படி நடந்து கொள்ளவே மாட்டார். அவர் இசைஞானியாக தன்னை உணர மாட்டார். எளிய மனிதராகவே உணர்வார்.

அதை நீங்கள் மார்க்ஸிடம் இருந்து பெரியாரிடம் இருந்து அம்பேத்கரிடம் இருந்து சேகுவேராவிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். இவர்கள் யாரும் உயிரோடு இல்லை எனினும் அவர்களது சிந்தனைகள் உயிரோடு இருக்கிறது. அவ்வளவு ஏன்? திருமாவளவனிடம் இருந்து கூட நீங்கள் தெரிந்து/கற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் இசைஞானி என்பதற்காக சக மனிதனுக்கான மரியாதையை மறுக்காதீர்கள். மனிதாபிமானம் மறக்காதீர்கள்.

சாதியும் மதமும் செய்வதையே நீங்களும் செய்வது அறம் அற்ற செயல். அது மனிதமற்றதும் கூட.

தவிரவும் இது உங்களின் இசையோடு வாழ்வதாக நீங்களே நம்புகிற தமிழ் இனத்தை சர்வாதிகார அரசியல் சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நேரமிது. உங்கள் தமிழ் இனத்தை காப்பாற்ற அந்த இனத்தில் ஒருவராக சக மனிதராக அன்பும் மனிதாபிமானமும் கொண்டு சமத்துவத்தை நேசிக்கிற பண்ணைப் புரத்து சின்னத்தாயின் மகனாக புத்துயிர் கொள்க எங்கள் இசைப்பெருமகனே… எங்கள் இசைப் பேரரசே!.

என்றும் உங்கள் இசைமீது
தீராக் காதலுடன் வாழ்ந்து மறையப் போகும் ஒருவனாக…

– முருகன் மந்திரம்

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன் – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உடபட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. இன்று அந்த போட்டி நடைபெறமால் தடுக்கப்பட்டிருக்கிறது.
அதைப்பற்றிய செய்தியாளர் சந்திப்பில்
மீரா மிதுன் கூறியதாவது

ஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் ஒருங்கினைப்பாளர் நேற்று போன் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அவரை சந்திக்க நேரில சென்றேன்
இன்று நிகழ்ச்சியை நடத்தகூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை கூட்டி வந்து என்னை பயமுறுத்தினார்.

நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்க்கினைப்பாளர் இணைந்து கொண்டு இன்று நிகழ்ச்சியை நடத்த விடாமல க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன்.

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன்.

தமிழ்ப்பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன். அதை இன்று நடத்த விடாமல் முறியடித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இன்றே இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று சின்ன சின்ன ஹோட்டலில் போய் நடத்த முற்பட்டேன். ஆனால் இந்த இறுதிப் போட்டியாளர்களின் கனவு, இந்த விழா மிகப்பெரியதாக இருக்கும் என்பது தான். அதை உடைக்க நினைக்கவில்லை. இந்த விழாவை கண்டிப்பாக மிகப்பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்ணாக நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன் என்றார்.

மேலும் பேசிய பதினாலு தமிழ் போட்டியாளர்களும் தங்கள் கனவுகளையும், மீராமிதுன் தங்களுக்கு தந்த ஆதரவையும் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். முழுக்க முழுக்க தமிழிலிலேயே அழகிகள் அனைவரும் பேசிய மேடையாக இது இருந்தது எல்லைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக
அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ரவ்னக் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.

என் பாட்ட கேட்டுதானே வாழ்றீங்க..; இளையராஜாவின் ஆணவ பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நேற்று நள்ளிரவை நடத்தினார் இளையராஜா.

6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 8 மணிக்கே தொடங்கியது.

நிகழ்ச்சி அரங்கில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பலரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் ஒருவர் மேடை அருகே வந்து ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து சென்றார். அவரை பார்த்த இளையராஜா பாடலை நிறுத்தி விட்டு அவரை கூப்பிட்டு கண்டித்தார்.

அப்போது பேசும்போது… இதுபோன்ற இடைஞ்சல்களை செய்யாதீர். நான் 5 மணி நேரம் நின்றுகொண்டு இசை கச்சேரி செய்கிறேன். என் பாட்டை கேட்டுதானே நீங்கள் வாழ்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் தானே என் பாடல்களே தானே உள்ளது என பேசினார் இளையராஜா.

இவரின் இசையில்லாமல் நாம் வாழ முடியாதா? எனவும் சிலர் விவாதிக்க ஆரம்பித்தனர். அவரின் இந்த பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

Music Director Ilayaraaj controversy speech again in his Concert

நீர் இல்ல; 2 லிட்டர் 7UP ரூ. 500; செம லேட்…. இளையராஜா விழா இம்சைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இளையராஜாவின் 76வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு அவரின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்பிபி மற்றும் யேசுதாஸ் அங்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அவர்கள் வரவே 8 மணி ஆனது. 8.30 மணி போல கமல்ஹாசன் வந்தார்.

இளையராஜா 7.45மணிக்கு விழாவை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்தனர்.

மேலும் விழா தொடங்கும்போதே தண்ணீர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வகைகள் விற்பவர்கள் கூட தண்ணீர் பாட்டில் வைத்திருக்கவில்லை.

இதனால் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. 2 லிட்டர் 7அப் கூல் ட்ரிங் ரூ. 500க்கு விற்கப்பட்டது. இதனால் பலரும் கோபம் அடைந்தனர்.

தண்ணீர் இல்லை. குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது? எதையாவது வாங்க வேண்டும் என மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

மேலும் காவல் துறையினரும் போதுமான அளவு இல்லை. ரூ. 1000 டிக்கெட் வாங்கியவர்கள் ரூ. 5000 சீட்களில் அமர்ந்தனர். இதனால் அவர்களுக்கு உட்கார சேர்கள் இல்லாமல் போனது.

மேலும் பலரும் நிற்க ஆரம்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி தொடங்கி 2 மணி நேரத்திற்கு மெலோடி மற்றும் சோக பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது. இதனால் 10 மணிக்கே நிறைய பேர் கலைந்து சென்றனர்.

ஆக.. இசையை கேட்க வந்தவர்களுக்கு இந்த இளையராஜாவின் இசை விழா இம்சை ஆனது.

Ilayaraaja Concert controversy happened on his birthday

More Articles
Follows