தொட்ரா இசை விழாவில் ஆர்.கே.செல்வமணி-சுரேஷ் காமாட்சி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் பிரபல தொழிலதிபர் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.

இந்த பெண் தயாரிப்பாளர் தன் வாழ்க்கையில் இரண்டே படங்களை மட்டும்தான் பார்த்துள்ளாராம்.

பாக்யராஜின் உதவி இயக்குனரான சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பாண்டிராஜின் மகன் பிருத்விராஜன், மலையாள நடிகை வீணா இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

மேலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

உத்தமராஜா என்பவர் இசையமைத்துள்ள இந்த தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களான பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்கே.செல்வமணி அவர்களும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்கே.செல்வமணி பேசியதாவது…

“கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது.

சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.

பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள்.

ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம்.

தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள்.

ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.

இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை.

சினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.

தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.

ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்..?

பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை.

எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான்.

இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.

தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார்.

அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

“சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.

ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம்.

இதுபோன்ற கட்டுபாடுகள் இருந்தால் விஜய்சேதுபதி வந்திருக்க முடியுமா? இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் சினிமாவுக்கு வந்திருக்க முடியுமா?

கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அப்போது அவர் பேசியதாவது…

“தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை.

எனக்கு ரூ. 2 கோடி சம்பளம் கிடைக்கும். அந்த படம் ஓடினாலும் ஓடவிட்டாலும் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும்.

பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள்.

படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.

டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்று அதிரடியாக பேசினார்.

Fefsi President RK Selvamani and Producer Suresh Kamatchi clash on Thodraa audio launch

மே 5-சென்னை; மே 9-காலா; மே 25-அரசியல்… ரஜினியின் அடுத்த திட்டங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்கு எடுக்கப்பட்ட அவரது படங்கள் சினிமா புகைப்படங்கள் போல இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் அவரது பணிகளை முடித்து விட்டு வருகிற மே 5-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.

அதனையடுத்து மே 9-ம் தேதி நடைபெறவுள்ள தனது காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.

இதையனைத்து தனது கட்சி பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாராம்.

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும், ரசிகர்களையும் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பானது மே 25-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஜூன் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாராம் ரஜினி.

இப்படம் அரசியல் கலந்த கதையாக உருவாகவுள்ளது. இப்படத்திற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்கிறார்.

மிரட்டலுக்கு பயமில்லை : டிராஃபிக் ராமசாமி விழாவில் விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி.

இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது

” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .

ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன்.

ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை.

படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது.

தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.
அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார்.

அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன்.

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன்.

நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார்.

கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது.

இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.

இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை.

இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே. சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா, ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Vijay dad SA Chandrasekar speech at Traffic Ramasamy Motion poster launch

பிரகாஷ்ராஜ் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட்டார் பிரியதர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.

மோகன்லாலை வைத்து மட்டுமே 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் இவர்.

2007ல் காஞ்சிவரம் என்ற படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.

அண்மையில் இவர் இயக்கிய படம் சில சமயங்களில்.

இதில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண் உள்ளிட்ட பலரும் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவா ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோ இவற்றுடன் இணைந்து ஐசரி கணேசன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கிய இந்த படம் முதன் முதலாக தியேட்டரில் வெளியாகாமல் ஆன்லைனில் வெளியானது.

இது வணிக நோக்கம் இல்லாமல் விருதுக்காக அவர் இயக்கிய படம்.

தனக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவனின் தவிப்புதான் இப்படத்தின் கதை.

அந்த கேரக்டரில்தான் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சிறப்பு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.

முதலில் தியேட்டரில் வெளியிட நினைத்திருந்த இயக்குனர் தற்போது சூழ்நிலை சாத்தியமில்லை என்பதால் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை காண கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம்.

இதற்கு முன்பே ஒரு சில தமிழ் படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A story about HIV Aids Sila Samayangalil movie released on Netflix

மீண்டும் நெருக்கம் காட்டும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா, நமீதா, ஆரவ், ஸ்நேகன், ஆர்த்தி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆரவ் பிக் பாஸ் வின்னர் ஆனார்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் நெருக்கம் காட்டினர்.

ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா ஒப்புக் கொண்டாலும் ஆரவ் ஆர்வம் காட்டவில்லை.

அதன்பின்னர் இருவரும் பிரியவே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா.

இந்த நிலையில் ஓவியா நேற்று தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்து’ தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓவியா, ‘நன்றி டியர் ஆரவ்’ என்று பதிளிதிருந்தார்.

இதைப் பார்த்த ஒரு ரசிகர், ‘அப்போ நாங்கதான் முட்டாளா? எப்படியோ நல்லா இருந்தா சந்தோ‌ஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஓவியா, ‘ரொம்ப சந்தோ‌ஷம்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

இதன் மூலம் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நெருக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

Whether Aarav Oviya fall in love Again

நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இரவு முதலே அவரை வாழ்த்த ரசிகர்கள் அவரது இல்லத்தின் அருகில் காத்திருக்கின்றனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ஹாப்பி பர்த் டே தல அஜித் என தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பின்னர் அளித்த விளக்கத்தில்… என் ட்விட்டர் பக்கத்தில் நான் அந்த பிறந்தநாள் வாழ்த்தை பதிவிடவில்லை. என தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

TN Minister Sengottaiyan clarifies his Birthday wishes to actor Ajith

More Articles
Follows