தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிளா.
இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைக்களம்…
ஆரம்பக் காட்சியில்.. ஒரு புதையலை ஒரு மரத்தடியில் புதைத்து வைத்து அதன் மேல் ஒரு கல்லை நட்டு வைக்கிறார் ஒருவர்.
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு அங்கே ஒரு கோயில் உருவாகிறது. அதன் அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் யோகி பாபு அமர்ந்து கொண்டு ஒரு சிறுவனுக்கு கதை சொல்கிறார்.. இப்படியாக ஆரம்பமாகிறது
ஆட்டோ டிரைவர் ரமேஷ் திலக்.. ஆட்டோ என்றாலே அவர் கண்டிப்பாக ரஜினி ரசிகன் தான்.. ஊருக்குள் பல பேரிடம் கடனை வாங்கி திருப்பித் தராமல் இழுத்தடிப்பவர் ரமேஷ் திலக்.. நிறைய பொய்களை சொல்லி ஏமாற்றுபவர்.
ஆனாலும் இவருக்கு விநாயகர் பக்தி அதிகம். கடன் தொல்லையால் அவதிப்படும் ரமேஷ் திலக்கிற்கு சில தினங்களில் திடீரென விநாயகர் தென்படுவதில்லை. ஆனால் ஊர்வசி & கருணாகரன் கண்களுக்கு தெரிகிறார்.
ஒரு கட்டத்தில் யோகிபாபு விநாயகராக வருகிறார்.. நீ நல்லவனாக மாறினால் மட்டும்தான் இனி நான் உன் கண்களுக்கு தென்படுவேன் என்கிறார்.
கடவுள் அவனின் குறைகளை தீர்த்தாரா.? இறுதியில் என்ன ஆனது? கடவுள் இருக்கிறாரா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்….
கதையின் நாயகன் ரமேஷ் திலக் என்றாலும் முதல் பாதியில் அவரது கேரக்டர் எந்தவிதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அதை சரி செய்துள்ளார்.
கடவுளாக வந்து பல கேள்விகளுக்கு விடை சொல்லி இருக்கிறார் யோகி பாபு.. ஜாதியை கடவுள் உருவாக்கவில்லை. உலகத்தில் எத்தனை ஜாதி இருக்கிறதோ அத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
மக்களிடம் கடவுள் எதையும் எதிர்பார்க்கவில்லை.. அதே சமயம் எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.. அதை கடவுளால் கூட மாற்ற முடியாது என்கிறார் யோகி பாபு.
ஊர்வசி கேரக்டர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.. ஏனென்றால் படத்தில் காட்டப்படும் ஒரே ஒரு பெண் அவர் மட்டும்தான். ஆனால் இது போன்ற ஒரு நல்ல ஹவுஸ் ஓனர் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.
நாயகனுக்கு கடன் கொடுத்த ஹரிஷ் பெர்ரடி மிகவும் சாந்தமாக தன் பணத்தை திருப்பி கேட்பது எல்லாம் நம்பும் படியாக.
நட்சத்திர அந்தஸ்து உள்ள கேரக்டர் தேவை என்பதால் கருணாகரனை படத்தில் வைத்துள்ளார்கள் போல அவருடைய கேரக்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.
ஆனால் வட இந்திய தாத்தாவாக வருபவரின் கேரக்டர் நம்மை கவர்கிறது.
குளப்புள்ளி லீலா கேரக்டர் கடுப்பு.. வீண்..
டெக்னீஷியன்கள்…
எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
கஷ்டத்துல உதவாத கடவுள் என்ன கடவுள்?” போதையில் வண்டி ஓட்டுவது.. குற்றம் செய்வது உள்ளிட்டோரை கடவுள் தண்டிப்பார் என்பது போலவும் வசனங்கள் உள்ளது.. ஆனால் போதையில் வண்டி ஓட்டி பலரை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா என்பதற்கு கடவுள் பதில் சொல்வாரா.??
நம்மிள் எல்லோருக்குள்ளயும் ஒரு விஷம் இருக்கு…அதுதான் சுயநலம்..” போன்ற வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.
இறைவன் வெளியே எங்கேயும் இல்லை.. அவர் உனக்குள் இருக்கிறார்.. நீ நேர்மையாக நடந்து கொண்டால் அவர் உனக்கு தென்படுவார்.. என்கிறார் இயக்குனர்
கடவுள் வரும் காட்சிகளுக்கு பரத் சங்கர் பில்டப் இசையை கொடுத்துள்ளார்.
படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை நிச்சயமாக கவரும்.. ஒளிப்பதிவு இசை எடிட்டர் தயாரிப்பாளர் என ஒவ்வொரு பெயரும் வரும்போது அதற்கு ஏற்ப டைட்டில் கார்டு காட்டப்படுவது சிறப்பு.. பொதுவாக இதுபோன்ற கிரியேட்டிவ் மலையாள இயக்குனர்களுக்கு கைவந்த கலை.
ஒளிப்பதிவு சிறப்பு.. ஆனால் ஐந்து கேரக்டர்களை மட்டுமே மீண்டும் மீண்டும் காண்பிப்பது ரொம்ப போர் அடிக்கிறது.
யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், வட இந்திய தாத்தா, சிறுவன், டீக்கடைகாரர் எனப் படத்தில் மொத்தம் 7-8 கேரக்டர்களை வைத்து யானை முகத்தானை இயக்கி இருக்கிறார்.
படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி.. ஒரு ஹீரோயினை கொடுத்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.
இதே படத்தின் மலையாள பதிப்பில் விநாயகருக்கு பதிலாக கிருஷ்ணர் கடவுளை காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.. ஆக மாநிலத்திற்கு மாநிலம் கடவுள் வேறுபடுகிறார் என்பதுதான் உண்மை..
ஆக யானை முகத்தான்.. உனக்குள் கடவுள்
Yaanai Mugathaan movie review and rating in Tamil