தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விருந்து விமர்சனம் 3.5/5.. நரபலி நரகம்
ஸ்டோரி…
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலைக்கான காரணம் தன் (அம்மாவின் முன்னாள் லவ்வர்) அர்ஜுன் என சந்தேகிக்கிறார் நிக்கி கல்ராணி.. அவரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்.
அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்..? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வரும் அர்ஜுன் இதில் முழுக்க முழுக்க ஆக்சன் நாயகனாக வலம் வருகிறார்.. விருந்து திரைக்கதையில் தனக்கு ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் அதிக மெனக்கெட்டு பட்டையை கிளப்பி இருக்கிறார்.
நிக்கி கல்ராணி தன் கேரக்டரை நிறைவாக செய்து இருக்கிறார்.. மலையாள நடிகர் முகேஷ் மற்றும் அவரது மனைவி தங்கள் கேரக்டர்களில் பணக்காரத்தனத்தை காட்டி இருக்கின்றனர்..
பாலண்ணா கேரக்டரில் வருபவர் அடிதடியிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.. இவர்தான் கொலைக்கான காரணமோ என எண்ணும் வகையில் தனது முகபாவனைகளையும் காட்டி இருக்கிறார்.
ஹரிஷ் பெராடியின் முகம் ஃபோட்டோவில் மட்டுமே இருந்தது.. எனவே இவர் கெஸ்ட் ரோல் என நினைத்தால் திடீரென கிளைமாக்ஷில் அதிரடி காட்டி இருக்கிறார்
மற்றும் ஆட்டோ டிரைவர் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
ரதீஷ் வேகாவின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.. அதிலும் முக்கியமாக அர்ஜுன் இன்ட்ரோ சீன் தீம் மியூசிக் அருமை..
ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் ஓகே ரதம் தான்..
ஓகே.. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருப்பது படத்தின் உயிரோட்டத்திற்கு உதவியிருக்கிறது..
ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் காட்சிகள் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.. கலை இயக்குனர் கைவண்ணத்தில் அர்ஜுன் வசிக்கும் வீடும் அந்த வீட்டில் வைக்கப்பட்ட அலங்கார பொருட்களும் ரசிக்க வைக்கிறது…. அதுபோல தொழில் அதிபர் முகேஷ் வீட்டில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.. அதற்கு ஏற்ப லைட்டிங்கும் கொடுத்திருப்பது சிறப்பு..
மலையாள இயக்குனர் தாமரக்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. மலையாள படம் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது..
முதலில் ஆக்சன் திரில்லர் என செல்லும் திரைக்கதை இடைவேளைக்கு பின்னரும் அதே வேகத்தில் விறுவிறுப்பாக பயணிக்கிறது.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென படத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதாவது விருந்து என்ற தலைப்புக்கு ஏற்றவாறு நரபலி கொடுக்கும் காட்சிகளை வைத்திருக்கிறார். நரபலி என்பது படிக்காதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் பணக்காரர்களும் செய்கிறார்கள்.. தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிதான் நரபலி என்று தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து இருக்கிறார்..
கிளைமாக்ஸ் காட்சியில் நரபலி கொடுக்கும் சாத்தான் கூட்டங்களை காட்டி அதற்கு தலைவனாக ஹரிஷ் பெராடியை காட்டியிருக்கிறார்..
நரபலி என்ற கொடூரத்தை இயக்குனர் காட்டி இருந்தாலும் அதில் பெரிய லாஜிக் இடிக்கிறது.. தன் குடும்பத்தை தனது வாரிசுகளை சர்வாதிகாரியாக வளர்ச்சி மிகுந்தவர்களாக காட்ட ஹரிஷ் போராடுகிறார்.. அப்படி என்றால் அவர் தனது குடும்பத்தை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்.?
கிளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் பேசும் நரபலி வசனங்கள் கைதட்ட வைக்கிறது.. ஆனால் அதுவும் கொஞ்சம் செயற்கை தனம் கலந்தே இருக்கிறது.
ஆக இந்த விருந்து.. நரபலி நரகம்
Arjuns Virundhu movie review
——–
