தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, முனிஸ்காநத், தீபக், ஜெய பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், அசோக் மற்றும் பலர்.
இசை – சத்யா சி
இயக்கம் – சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
படத்தொகுப்பு – எ.எல். ரமேஷ்.
தயாரிப்பு – அபிராமி மீடியா ஒர்க்ஸ்.
ZEE5 ஓடிடி ரிலீஸ் : 13 -10- 2021
ஒன் லைன்…
ஒரு குடும்பமாகட்டும்… ஒரு ஊராகட்டும்… ஒரு நிறுவனமாகட்டும்… ஒரு நாடாகட்டும்.. ஒரு கட்சியாகட்டும்… நாம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்..
எவர் இல்லாவிட்டாலும் எல்லாமே நடக்கும். ஆணவத்தில் ஆடக்கூடாது என்பதே இப்படத்தின் கரு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்திருக்கும் படம்.
கதைக்களம்…
பிரபலமான நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா).
தன் வீடு முதல் தன் ஆபிஸ் வரை எல்லாமே தன் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்ற நினைப்பு இவருக்கு. நம் பேச்சுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமும் இவருக்குண்டு.
ஒரு சூழ்நிலையில் அவசரமாக செல்லும்போது ஒரு கோர விபத்தை சந்திக்கிறார் பரசுராம்.
அதில் படுகாயமடைந்த அவரின் உயிர் மெல்ல மெல்ல பிரிகிறது..
அப்போது அந்த விண்ணுலகத்தில் காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) சந்திக்கிறார்.
தான் இல்லையென்றால் ஆபிஸ் & வீடு எதுவும் இயங்காது. எனவே தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க கால அவகாசம் தருமாறு காலத்திடம் கேட்கிறார்.
அதுவரை தம்பி ராமையாவுடன் தானும் கூடவே இருப்பதாகவும் சொல்லி அவகாசம் தருகிறார் சமுத்திரக்கனி்.
அதன்படி 90 நாட்கள் ( 3 மாதங்கள்) அவகாசம் கொடுக்கப்படுகிறது.
விபத்தில் மீண்டு கண்விழிக்கும் தம்பி ராமையா அந்த 3 மாதத்தில் என்ன செய்தார்.? அவருடைய கடமைகளை செய்து முடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
காமெடியாக இருந்தாலும் குணசித்திர கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக செய்பவர் தம்பி ராமையா.
இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சும்மா விடுவாரா..? அடுத்த தேசிய விருதுக்கு முன்பதிவு செய்துவிட்டார் தம்பி ராமையா எனலாம்.
சிடுசிடுவென கண்டிப்பாக பேசுவது முதல் கால தேவனிடம் கெஞ்சுவது முதல் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
மீண்டும் மண்ணில் வாழ ஆரம்பித்ததும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் மகனாக தீபக், மகளாக சஞ்சிதா ஷெட்டி, நண்பனாக முனிஷ்காந்த், தம்பி ராமையாவின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி…. இப்படி அனைவருமே தங்கள் நடிப்பில் கச்சிதம்.
அதில் ஸ்ரீரஞ்சனி அசத்தலான அழகான அருமையான அம்மா. அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையின்றி நடித்திருக்கின்றனர்.
டெக்னீஷியன்கள்…
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சத்யாவின் இசையின் படத்துக்கு சிறப்பு. தேவைக்கு ஏற்ப சரியாகக் கொடுத்திருக்கின்றனர்.
வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஷார்ப். வசனங்கள் தான் படத்தை பெரிதும் தாங்கி நிற்கின்றன.
இது ஒரு நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை என்பதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி சீரியல் போல ஒரு நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. தவிர்த்திருக்கலாம் இயக்குனர் சமுத்திரக்கனி.
ஆனால் படத்தின் நீளம் குறைவு (ஒன்றே முக்கால் மணி நேரம்) என்பதால் நாடகத்தனம் பெரிதாக தெரியவில்லை.
மலையாள சினிமா பாணியில் இப்படியொரு சுவாரஸ்யமான கதையைத் தேர்வு செய்த சமுத்திரக்கனியை நிச்சயம் பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும்.
கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையில் மற்றொருவர் இல்லாமல் போனாலும் எல்லாம் தானாக நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.
ஆக இந்த விநோதய சித்தம்… வித்தியாசமான சிந்தனை
Vinodhaya Sitham movie review and rating in Tamil