தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
ஒரு காதல் ஜோடியால் இரு கிராமத்து பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல். என வழக்கமான கிராமத்து பாணியிலான கதை.
கதைக்களம்…
வீரபாண்டியபுரம் மற்றும் நெய்க்காரப்பட்டி என்ற இரு கிராமங்களிடையே தீராத பகை இருந்து வருகிறது. நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ்.
இதில் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சரத். இவரின் மகள் நாயகி மீனாட்சி.
நாயகன் ஜெய் மற்றும் நாயகி மீனாட்சி இருவரும் காதலிக்கின்றனர். ஜெய்க்கு யாருமில்லை. ஆனால் மீனாட்சியின் அப்பா ஊர் பெரியவர். ஜாதி வெறியர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறார் நாயகி.
திருட்டுத்தனமாக திருமணம் செய்தால் என்னால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால் நீ இப்படி செய்தால் உன் குடும்பத்திற்கு அவமானம் என்கிறார் நாயகன்.
இதனால் நாயகியை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டுக்கே செல்கிறார். முதலில் சம்மதிக்கும் நாயகியின் அப்பா.. பின்னர் ஜெய்யை போட்டுத் தள்ள ப்ளான் போடுகிறார். அதுபோல் ஜெய்யும் சில திட்டங்கள் போடுகிறார்.
அதன்பிறகு என்னானது.? ஜெய் போட்ட திட்டம் என்ன? திட்டம் போட என்ன காரணம்.? காதல் என்ன ஆச்சு? இறுதியில் வென்றது யார்? எப்படி? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
இதுநாள் வரை நாம் ஜெய்யை ஹீரோவாக மட்டுமே பார்த்து இருக்கிறோம். இதில் இசையமைப்பாளராகவும் உயர்ந்து இருக்கிறார். மனதை வருடும் பாடல்களை கொடுக்கவில்லை என்றாலும் சில பாடல்கள் கேட்கும்படியே கொடுத்து ஜெயித்து இருக்கிறார் ஜெய். அடி அவரா..? என்ற பாடல் தாளம்போட வைக்கிறது.
வழக்கமான துள்ளல் இல்லாமல் ஏதோ அமைதியாகவே நடித்துள்ளார் ஜெய். நாயகியுடன் பெரிதாக ரொமான்ஸ் இல்லை. ஆனால் அதற்கு ப்ளாஷ்பேக்கை ஒரு காரணமாக வைத்துவிட்டார் டைரக்டர்.
ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மீனாட்சி மின்னுகிறார். ப்ளாஷ்பேக்கில் வரும் டீச்சர் கேரக்டர் கச்சிதம். அகன்ஷா சிங்க்கு பெரிய ஸ்கோப் இல்லை.
அன்னபாரதி சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பாலசரவணன் காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவியிருக்கிறது. காளிவெங்கட் நடிப்பு கவனிக்க வைத்துள்ளது. சென்டிமெண்டிலும் கவர்ந்துள்ளார்.
படத்தில் இரு கோஷ்டி என்பதால் நிறைய வில்லன் அடியாட்கள் உள்ளனர். அதில் சரத் (இரு வேடங்களில்), ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், அர்ஜெய் உள்ளிட்டோர் கவனம் பெறுகின்றனர். அருள்தாஸ் கேரக்டர் தேவையா?
டெக்னீஷியன்கள்..
மலைவாழ் மக்கள் வசிக்கும் இயற்கை பகுதி காட்சிகள் ஒளிப்பதிவிற்கு சிறப்பு சேர்த்துள்ளது. வேல்ராஜ் தன் பணியில் சிறப்பு. திண்டுக்கல் மாவட்ட அழகை திகட்ட திகட்ட தந்திருக்கிறார்.
படத்தின் நீளம் மொத்தம் 2 மணிநேரம்தான் என்பதால் பிரச்சினையில்லை.
படத்தின் டைட்டில் கார்டு போடும் நேரத்தில் வரும் அஜய்யின் பின்னணி இசை எரிச்சலை தருகிறது. டைட்டில் கார்ட்லும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை ஓகே ரகம்.
வழக்கமான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்டுக்களுடன் கொடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் விறுவிறுப்பு கூட்டி கொடுத்திருக்கலாம்.
ஆனால் இது வழக்கமான சுசீந்திரன் படம் போல் இல்லை. ஏனென்றால் அதிகமாகவே வன்முறை உள்ளது. அதிலும் தலை துண்டிப்பு, கை கால் துண்டிப்பு,.. உயிரோடு எரித்தல் என நிறைய கலவரங்களை காட்டியுள்ளது ஏனோ. சிவ.. சிவா…
ஆக வீரபாண்டியபுரம்… காதலும் மோதலும் நிறைந்த புரம்
Veera Pandiyapuram movie review and rating in Tamil