தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம், டில்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வினோத் குமார் சென்னியப்பன் தயாரிக்க ‘வான் மூன்று’ படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது.
ஒன்லைன்…
வான் என்றால் பயணம் என்றொரு பொருள் உண்டு.. அதன்படி மூவரின் வாழ்க்கை பயணம் தான் இந்த வான் மூன்று.
கதைக்களம்…
காதல் தோல்வியால் விஷம் அருந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் நாயகன் ஆதித்யா பாஸ்கர். இவரை போலவே அதே வார்டில் வேறொரு காதல் தோல்வியால் விஷம் அருந்தி சிகிச்சைக்கு அனுமதிப்படுகிறார் நாயகி அம்மு அபிராமி.
இவர்கள் சிகிச்சைக்காக பத்து நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடுகிறது. அப்போது அம்மு மீது ஆதித்யாவுக்கு காதல் வருகிறது. இது ஒரு கதை.
இரண்டாவதாக வினோத் மற்றும் அபிராமி. – அபிராமியின் அப்பா எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்கிறார் வினோத். திருமணமான ஒரு வருடத்திற்குள் தன் மனைவிக்கு பிரைன் டியூமர் என்ற வியாதி இருப்பதை அறிகிறார்.
தன் காதலியை காக்க போராடும் காதலனின் கதை தான் இது.
மூன்றாவது காதல் டெல்லி கணேஷ் லீலா.. – வயது முதிர்ந்த இந்த காதல் தம்பதியர் தங்கள் பிள்ளைகளின் ஆதரவு இல்லாமல் வாழ்கின்றனர்.
தன் மனைவிக்கு தீவிரமான வியாதி இருப்பதை அறிந்த டெல்லி கணேஷ் அவரை காப்பாற்ற போராடுகிறார். பணமில்லாமல் தவிக்கிறார். இந்த 3 காதல் ஜோடியின் பயணம் தான் இது.
இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
ஆதித்யா பாஸ்கர் – அம்மு அபிராமி
வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாச்சலம்
டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் ஆகியோர் தங்களது கேரக்டரை உணர்ந்து அதற்கு உயிரூட்டி உள்ளனர்.
ஆதித்யாவின் அம்மாவாக வருபவர் ஒரு கிராமத்து பெண்மணியின் யதார்த்த உணர்வை சிறப்பாக செய்துள்ளார்.
வினோத் மற்றும் அபிராமியின் காதல் நம்மை கண்கலங்க வைக்கிறது.
தான் நேசித்த மனைவியின் சிகிச்சைக்கு பணம் இல்லையே என டெல்லி கணேஷ் போராடும் தவிப்பு ஒரு முதிர்ந்த காதலின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதுபோல லீலாவின் நடிப்பு.. விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பதை உணர செய்திருக்கிறது.
டெக்னீஷியன்கள்…
நாம் அளவுக்கு அதிகமாக நேசித்த ஒருவரை பிரிய நேரிடும் போது காதல் வலியை உணர்வோம். அந்த வலியை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கிட்டத்தட்ட இந்த படம் முழுவதுமே ஒரே மருத்துவமனையில் நகரும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ் அதனை போர் அடிக்காமல் நேர்த்தியாக படம் பிடித்து கொடுத்திருப்பது சிறப்பு.
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. அது படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு இதமளிக்கிறது.
படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் கொஞ்சம் காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என நினைத்து இந்த படத்தை இயக்கியதாக இயக்குனர் முருகேஷ் தெரிவித்திருந்தார். எனவே அதன் படி டிவி சீரியல் போல மெதுவாக நகரும் கதையை அமைத்திருக்கிறார்.
ஆனால் காதலில் தோல்வியடைந்த ஆதித்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். ஒரு வார கட்டத்தில் அம்மு மீது ஆதித்யாவுக்கு காதல் வருகிறது. சின்சியராக காதலித்த ஒருவன் மீண்டும் அடுத்த காதலில் ஒரே வாரத்தில் விழுவது எப்படி என்றே தெரியவில்லை? அது இயக்குனருக்கே வெளிச்சம்.
காதலுக்கு வயது தடையில்லை என்பதை ஆழமாக சொல்லி இருக்கிறார்.. அதுபோல எத்தனை காதல் வந்தாலும் காதல் காதல்தான். அதே சமயம் 65 வயதில் நாம் ஓய்வாக அமர்ந்திருக்கும் போது எந்த காதல் நம் மனதில் வருகிறதோ அது மட்டுமே உண்மையான காதல் என விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.
ஆக வான் மூன்று… முதல் காதல் முதல் முதிர்ந்த காதல் வரை
Vaan Moondru review and rating in tamil