தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்….
அடர்ந்த ஒரு காட்டுப் பகுதியில் நிறைய நகைகள் அணிந்து சென்ற ஒரு செல்வந்தரை 4 பேர் கொண்ட கும்பல் போட்டு தள்ளுகிறது. அவர்களே ஒரு போலீஸ் நிலையத்திலும் சரண் அடைந்து விடுகிறார்கள்.
மறுநாள் காலை அவ்வழியே செல்லும் பிரேம்ஜி பிணம் கிடப்பதை பார்த்து அதை ஓரமாக மரத்தடி நிழலில் போட்டுவிட்டு பிணத்தின் செல்போன் வாட்ச்சை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.
அதன் பின்னர் தான் போலீசுக்கு மற்றொரு பிரச்சினை உருவாகிறது. கொலை செய்யப்பட்ட இடம் ஒரு இடம்.. பிரேம்ஜி பிணத்தை தள்ளி வைத்ததால் அது மற்றொரு காவல் எல்லையில் உட்பட்டது என இரு போலீசுக்கும் பிரச்சனை உருவாகிறது.
அவர்களுக்கு அந்த பிணத்தின் மேல் கிடந்த லட்சக்கணக்கான நகைகள் எங்கே சென்றது? நமக்கு கிடைத்தால் நாம் பங்கு போட்டுக் கொள்ளலாமே என போலீஸ் தரப்பில் மோதல் வெடிக்கிறது.
இதனிடையில் பிரேம்ஜியை துன்புறுத்தி நகைகள் எங்கே.? என்று விசாரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்லும் பிரேம்ஜி வாக்கி டாக்கியை எடுத்துச் செல்கிறார். இதனால் போலீசுக்கு மேலும் பிரச்சினை உருவாகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது.? வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது. நீதிபதி என்ன தீர்ப்பளித்தார்.? பிரேம்ஜியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? நகையை எடுத்தது யார் ? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த சத்திய சோதனை.
கேரக்டர்கள்…
பிரேம்ஜி இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் தன்னுடைய வழக்கமான நடிப்பை அவர் செய்திருப்பது தான் நமக்கு வந்த சத்திய சோதனை. ஒரு நாயகன் வேடம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தியிருக்கலாமே பிரேம்ஜி.?!
படத்தில் கதாநாயகி ஒருவர் ஏன் வந்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்?
‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சித்தனாக நடித்தவர் கே.ஜி.மோகன். இதில் விரைவில் ரிட்டையர்டு ஆகப்போகும் காவல்துறை அதிகாரி குபேரனாக நடித்துள்ளார். அப்பாவி போலீசாக இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் சிரிப்பலை. இவருக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும்.
நேர்மையான நீதிபதியாக பேச்சாளர் கு. ஞானசம்பந்தன். போலீசை இவர் கிடுக்கி புடி போட்டும் கேட்கும் கேள்விகள் கைத்தட்டல் ரகம்.
பொய் பேசும் போலீஸ்.. நகைக்கு ஆசைப்படும் போலீஸ்.. என அனைத்தையும் நீதிமன்றம் கண்டிப்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.
படத்தில் பிரேம்ஜியின் அக்கா மாமாவாக வரும் கருணா ராஜா மற்றும் ரேஷ்மா ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அதிலும் தன் மனைவியின் தம்பிக்காக கருணா ராஜா பரிந்து பேசும் காட்சிகள் மச்சான் உறவு முறையை அழகாக சொல்கிறது.
லந்து செய்யும் பாட்டி… போலீஸ் இன்பார்மர் குள்ளன் ஆகியோர் படத்தில் அதிகமாக கவனம் பெறுகின்றனர்
டெக்னீஷியன்கள்…
படத்தொகுப்பாளர் – வெங்கட் ராஜன்.
இயக்குநர் – சுரேஷ் சங்கையா.
ஒளிப்பதிவாளர் – ஆர்.வி சரண்.
பாடல் இசையமைப்பாளர் – ரகுராம்.
பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி
கலை இயக்குநர் – வாசுதேவன்.
ஐயப்ப சாமி பாடலும், கங்கை அமரன் குரலில் வரும் பாடலும் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் —-யோலி என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுகிறது. சத்திய சோதனை என்ற இந்த படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள் தேவையா.? அது கிராமத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாக இருந்தாலுமே அதை தவிர்த்து இருக்கலாம்.
ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை கொடுத்த சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். திறமையற்ற போலீசால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை தன்னுடைய திரை கதையால் சொல்லி இருக்கிறார்.
இந்த காலத்தில் நேர்மையாக இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் அவஸ்தைகளையும் சொல்லி இருக்கிறார்.
அதே சமயத்தில் நல்லவர்களிடம் மட்டும் நல்லவிதமாக நடந்து கொள். கெட்டவர்களிடம் அவர்கள் போக்கிலேயே சென்றுவிடு என்பதையும் அந்த பாட்டி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஆக சத்திய சோதனை.. நேர்மைக்கு வந்த சோதனை
Sathiya Sothanai movie review and rating in tamil