தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரூபன் திரை விமர்சனம் 3/5
வனப்பகுதி பட கதைகள் என்றாலே அதில் இருக்கும் வளங்களை விற்கும் ஒரு கும்பல் நிச்சயமாக இருக்கும். இதில் அந்த கும்பலுடன் ஆன்மீகத்தை கலந்து இந்த ரூபனை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன்.
ஸ்டோரி…
Casting : Vijay Prasad, Gayathri Rema, Charli, Kanja Karuppu, Ramar
ஒரு அடர்ந்த வனப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கிறார்கள் நாயகனும் நாயகியும்.. நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமா.. இவர்களுக்கு குழந்தை இல்லை.. எனவே ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் இவர்களை யாரும் அழைப்பதில்லை.. சபரிமலைக்கு மாலை போட்டால் கூட யாரும் பூஜையிலும் பங்கேற்பதில்லை..
இதனால் வெறுத்து ஊரை விட்டு ஒதுங்கி / ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இப்படியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நாயகனுக்கு திடீரென காட்டில் ஒரு குழந்தை கிடைக்கிறது.. அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார்
இது ஒரு புறம் இருக்க காட்டில் உள்ள யானை சிங்கம் புலி உள்ளிட்ட மிருகங்களை வேட்டையாடி வெளிநாடுகளுக்கு விற்று பிழைப்பு நடத்துகிறார் வில்லன்.
இதனை கண்டுபிடிக்கும் நாயகனை அவர்கள் பழி தீர்க்க நினைக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஊருக்குள் புலி வந்து விட்டதாக எல்லாரையும் பயமுறுத்துகின்றனர்.
எனவே ஊருக்குள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என போலீஸ் கட்டு கட்டுப்பாடு விதிக்கிறது.. இதனால் பிழைப்புக்காக நாயகனால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் மர்மமான முறையில் 4 – 5 பேர் கொல்லப்பட கொலைப்பழி நாயகன் மீது விடுகிறது.
இதன்பிறகு என்ன நடந்தது.? நாயகன் நீதியை நிரூபித்தாரா? வில்லன் கோஸ்டி என்ன செய்தது.? ஊருக்கு மீண்டும் வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் பிரசாத்.. வீரமான நாயகன் விவேகமான கணவன் என அழகாகவே செய்திருக்கிறார். முகம் முழுவதும் தாடியை வைத்து முகத்தில் உணர்ச்சிகளை மறைத்து விட்டார்.. கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..
நாயகி காயத்ரிக்கு பெரிதாக வேலை இல்லை. கொடுத்து பாத்திரத்தை தன்னால் முடிந்தவரை நிறைவாக செய்ய முற்பட்டிருக்கிறார்.. அதே சமயத்தில் புலி ஊருக்குள் வந்த சமயத்தில் கணவன் வீட்டில் இல்லை என அவர் துடித்துடிக்கும் காட்சி நடிப்பை பாராட்டலாம்.. ஆனால் கணவனை இவர் காப்பாற்றாமல் அடுத்தவர் உதவியை மட்டும் எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பது ஏனோ.?
பெரும்பாலும் சார்லி அவரது நடிப்பில் சபாஷ் பெற்று விடுவார்.. இந்த படத்தில் அவருக்கான ஸ்கோப் மிகவும் குறைவு.
விஜய் டிவி புகழ் ராமரை பார்த்ததும் தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது.. ஆனால் அவரது காமெடிக்கு நம்மால் எந்த கைதட்டலும் கொடுக்க முடியவில்லை. அதுபோல கஞ்சா கருப்பு நடிப்பிலும் நகைச்சுவை இல்லை.. அவரது குரல் கூட அவரே கொடுத்ததாக தெரியவில்லை..
டெக்னீசியன்ஸ்…
Directed By : Ayyappan
Music By : Aravindbabu
Produced By : AKR Future Films – K.Arumugam, Elangkarthikeyan, M.ராஜா
ராஜு ராஜேந்திரனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. அடர்ந்த காட்டுக்குள் தன் கேமராவை நுழைத்து ஒரு அழகான ஆன்மிகம் கலந்த ஆக்சன் படத்தை கொடுக்க உதவி புரிந்திருக்கிறார்.
அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களை திரும்ப கேட்கலாம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.. சில இடங்களில் ஓவர் இரைச்சலை கொடுத்திருப்பதையும் இசை அமைப்பாளர் கவனித்திருக்கலாம்..
பல ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் படங்கள் ஐயப்பன் படங்கள் என நிறைய படங்கள் வந்திருந்தன.. இவற்றையெல்லாம் ஒரு சீசனில் மக்களும் பார்த்து ரசித்தனர்.. ஆனால் தற்போது குறைந்துவிட்டது.
இந்த படத்தில் ஆன்மீகத்தை மையப்படுத்தி ஐயப்பன் சபரிமலை சீசனை கொண்டாடுவது போல காட்சிகள் நிறைய வைத்திருக்கின்றனர்.. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் எங்கெங்கோ சென்று திடீரென கிளைமாக்ஸ்சில் ஐயப்பனை தரிசிப்பதாக காட்சிகள் வைத்து விட்டது ஒரு குழப்பமான திரைக்கதையை காட்டுகிறது.
அதேசமயம் ஆன்மீகத்துடன் கமர்சியல் விஷயங்களையும் கலந்து பேண்டஸியான ஒரு திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் ஐயப்பன் பெயரிலையே ஐயப்பன் சாமி இருப்பதால் அதற்கு உயிரூட்டும் வகையில் கிட்டத்தட்ட 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சியை கொடுத்து இருக்கிறார்.
Rooban movie review
