தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஃபேண்டஸி கதையில் குடிசை வாழ் மக்களின் அவல நிலையை மாவீரன் கொண்டு சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்.
இவர் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர். முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்களம்…
கூவம் ஆற்றங்கரையில் தன் அம்மா சரிதா தங்கை மோனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் காமிக்ஸ் ஓவியர் சத்யா (சிவகார்த்திகேயன்). இவர் சுப்ரமணி என்ற பெயரில் கன்னித்தீவு போல காமிக்ஸ் ஓவியங்களை வரைந்து கொடுக்கிறார்.
இவர் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகத்தில் எடிட்டராக பணிபுரிகிறார் அதிதி.
ஒரு கட்டத்தில் தேர்தலுக்காக ஆற்றங்கரை மக்களை புதிதாக கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றுகின்றனர் அரசியல்வாதிகள். ஆனால் தரமற்ற வீடுகளால் அங்கு வசிப்பதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிரமம் ஏற்படுகிறது.
வீடுகளை இழந்து வந்த அந்த மக்கள் செய்வதறியாமல் நிற்கும் போது அங்குள்ள பிரச்சினைகளை ஓவியமாக மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
ஒருநாள் தன் தங்கைக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை கூட கேட்க முடியாமல் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் ஒரு விபத்தால் அவரது வாழ்வில் ஒரு புதிய மாற்றம் உண்டாகிறது.
ஒரு அசரிரீ குரல் மூலம் அவருக்கு புதிய சக்தி பிறக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது? பயந்த சுபாவம் கொண்ட சிவா அரசியல்வாதிகளை எதிர்த்தாரா.?மக்களுக்கு விடிவு காலம் பிறந்ததா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
அடிதடி ஆக்சன் ரொமான்ஸ் என வழக்கமான பாணியில் சிவகார்த்திகேயன் செல்லாமல் பயந்த சுபாவம் அப்பாவி இளைஞன் குரல் கேட்டு நடிக்கும் சாமானியன் என வெளுத்து கட்டி இருக்கிறார்.
தன்னுடைய காமெடி கலந்த பாடி லாங்குவேஜையும் கொடுத்து சத்யா கேரக்டருக்கு சத்துணவு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
வழக்கமான நாயகியாக அதிதி. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.
ஒரு முன்னணி நடிகராக இருந்தும் சக போட்டியாளர் சிவகார்த்திகேயன் படத்திற்கு அசரீரி குரல் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. தன்னுடைய வழக்கமான நக்கல் கலந்த வேகமான பேச்சை கட்டுப்படுத்தி அழகிய தமிழில் பேசி அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
கொஞ்ச நாள் தன் காமெடிக்கு இடைவெளி கொடுத்த யோகி பாபு இதில் சிக்ஸர் அடித்திருக்கிறார். கவர்மெண்ட் காண்ட்ராக்ட் வேலையை நம்பி தான் ஒரு ஹிந்திகாரன் என பொய் சொல்லி அப்பார்ட்மெண்டில் வேலைக்கு வருகிறார்.
அப்போது முதலே குமார் என்ற வார்த்தையை கூட தமிழில் எழுதி ஹிந்தி போல மேலே கோடு போடுவதாக அவரது காமெடி தொடங்குகிறது.. அது முதல் அவரது ஒன்லைனர் காமெடி களை கட்டுது.
மிரட்டலான வில்லனாக மிஷ்கின். தன் அரசியல்வாதி கேரக்டரை மிளிர செய்துள்ளார். ஜெயக்கொடி கேரக்டரை ஜெயிக்க வைத்துள்ளார்.
இவரின் நண்பராக உதவியாளராக வரும் தெலுங்கு நடிகர் சுனில் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவாக சரிதா நடித்துள்ளார். குடிசைபபகுதி மக்களின் யதார்த்த வாழ்வை அப்பகுதி பெண்மணியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அப்பார்ட்மெண்ட் வாசிகளின் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். முக்கியமாக நடிகர் மதன் தன்னுடைய கேரக்டருக்கு நடிப்பால் மகுடம் சூட்டியிருக்கிறார்.
டெக்னீஷியன்கள்…
குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு இருவரது பணியும் கச்சிதம். முக்கியமாக சேரி பகுதியும் குடியிருப்பு வாசிகளின் அப்பார்ட்மெண்டும் என அனைத்தையும் நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.
முக்கியமாக அடிக்கடி திரையில் வரும் ராம் மூர்த்தியின் காமிக்ஸ் ஓவியங்களும் நம்மை அதிகமாகவே கவனிக்க வைக்கின்றன.
அதுபோல நாயகன் பயந்து பயந்து போடும் சண்டைக் காட்சிகளைச் சிரத்தையுடன் செய்து இருக்கிறார் ஃபீனிக்ஸ் பிரபு.
ஒளிப்பதிவு : விது அய்யன்னா
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
இசை : பரத்சங்கர்
விது அய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். முக்கியமாக சிவகார்த்திகேயன் அண்ணாந்து பார்க்கும் காட்சிகளிலும் மிஸ்கின் & யோகி பாபு உள்ளிட்டோர் அண்ணாந்து பார்க்கும் காட்சிகளிலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.
எனக்கும் தினமும் இரவு 9.45 மணிக்கு எனக்கும் ஒரு குரல் கேட்கும் என யோகி பாபு சொல்லும்போது கண்டிப்பாக மதுப்ரியர்கள் மனம் மகிழ்வார்கள்.
முதல் பாதியில் இருந்த கலகலப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவுதான். எனவே ஓரிரு காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர்.
முக்கியமாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஹேர் ஸ்டைலை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். படம் முழுவதும் சிவா டல்லாக வருவது போலவே உள்ளது. அதை இயக்குனர் மற்றும் காஸ்டியூமர் கொஞ்சமாவது கவனித்திருக்கலாம். ஒருவேளை கோழைகள் அப்படித்தான் இருக்க வேண்டுமா என்ன.?
பரத் சங்கரின் இசையில் ‘சீனா… சீனா…’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மேலும் சிவா அதிதி வரும் மான்டேஜ் சாங் ‘வண்ணாரப்பேட்டையில…’ பாடலும் ரசிக்க வைக்கிறது.
கூவம் கரையோர மக்களின் வாழ்வாதாரத்தையும் குடிசை மாற்று வாரியத்தின் கேவலமான தரத்தையும் தோலுறுத்தி காட்டி இருக்கிறார் இந்த ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின்.
வெறுமனே ஃபேண்டஸி கதை சொல்லாமல் அதில் மக்கள் பிரச்சனையை கலந்து அதற்கு மாவீரன் என்ற உருவம் கொடுத்து அசரீரீ குரல் என வித்தியாசமான சிந்தனையோடு திரைக்கதை அமைத்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்.
ஆக மாவீரன்.. மக்கள் ரசிக்கும் மாஸ் வீரன்
Maaveeran movie review and rating in tamil