‘கட்சிக்காரன்’ விமர்சனம்.; தலைவனை தட்டிக் கேட்கும் தொண்டன்

‘கட்சிக்காரன்’ விமர்சனம்.; தலைவனை தட்டிக் கேட்கும் தொண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தன் குடும்பத்தைக் கூட கவனிக்காது கட்சிக்காக உழைக்கும் ஒரு உண்மையான தொண்டன்… ஊழல் செய்து உண்மையான தொண்டனை கூட விரட்டியடிக்கும் தலைவன். இவர்களுக்கு நடைபெறும் மோதலே கதை.

கதைக்களம்…

கட்சி கட்சி கட்சி அதுதான் என் உயிர் மூச்சு என்று வாழ்கிறார் கதாநாயகன்.. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது கூட இன்ன ஜாதி என்ன மதம் என்று கேட்காமல் அவர் போடும் ஒரே கண்டிஷன் தன் கட்சியில் தன் மனைவி இணைய வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு விசுவாச தொண்டனாக இருக்கிறார் விஜித் சரவணன்.

தன் தலைவன் தான் எல்லாமே.. அவரால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறார்.

ஆனால் கட்சித் தலைவனோ தன்னுடைய சுயலாபத்திற்காக மறைமுக அனைத்தையும் செய்கிறார். கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது என அனைத்தையும் தொண்டன் செய்கிறார். பணம் இல்லாத போது தன் மனைவி தாலி வீட்டை கூட அடமானம் வைக்கிறார் தொண்டர்

ஒரு கட்டத்தில் தனக்கு கவுன்சிலர் போஸ்டிங் கேட்கும்போது தான் தன் தலைவரின் உண்மை முகம் தெரிய வருகிறது.

இதனால் வெறுத்துப் போகும் தொண்டன் தான் செலவு செய்த பணத்தை எல்லாம் திருப்பி கேட்கிறார்.

ஒரு அரசியல்வாதியிடம் கொடுக்கப்பட்ட பணம் எப்படி கிடைக்கும் என மிரட்டுகிறான் தலைவன்.. என்னை போல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீ பணத்தை திருப்பி கொடுத்து ஆக வேண்டும் என மல்லுக்கட்டி நிற்கிறார் நாயகன்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன். தொண்டன் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார்.. கட்சிக்காக அனைத்தையும் இழந்து நிற்கும் போது நமக்கு அவர் மீது பரிதாபம் வருகிறது.

ஒரு கட்டத்தில் தேர்தலில் நிற்க ரெடியாகும் போது.. எதிர்க்கட்சி வேட்பாளரிடம் அவர் பேசும் ஒரு டயலாக் பாராட்டுக்குரியது. நீங்களும் ஓட்டுக்கு பணம் கொடுக்காதீங்க.. நானும் பணம் கொடுக்க மாட்டேன்.. நாம ரெண்டு பேரும் பணம் கொடுக்கலைன்னாலும் மக்கள் கண்டிப்பா வந்து ஓட்டு போடுவாங்க.

நீங்க நல்லவன்னு நினைச்சா உங்களுக்கு ஓட்டு போடட்டும். நான் நல்லவன் என்று நினைச்சா எனக்கு ஓட்டு போடட்டும்.” என்ற வசனம் பேசும் அந்த காட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் செருப்படி.

அவரது மனைவி அஞ்சலியாக ஸ்வேதா டாரதி. நடுத்தர மக்கள் குடும்ப போராட்டத்தை காட்டுயிருகிறார். கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி.

மக்கள் கட்சித் தலைவராக சிவ சேனாதிபதி.. முதலில் நல்லவன் போல் நடித்து கட்சி தொண்டனையும் ரசிகரையும் ஏமாற்றி வைக்கிறார். பின்னர் தான் அவரது சுயரூபம் தெரிய வரும்போது ஆஹா இவன் பக்கா அரசியல்வாதி என்ற எண்ணம் வருகிறது.

அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவரது பிளாஷ்பேக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாயகனின் நண்பனாக வரும் தெனாலிக்கு சிறப்பான வேடம்.. எவன்னய்யா.. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சான்? ஒருத்தர் கணக்கு காட்டலைன்னு கட்சி ஆரம்பிச்சாரு.. ஒருத்தரு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்க கட்சி ஆரம்பிச்சாரு. ஒருத்தர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர்றாரு.. ஒருத்தர் ஜாதிக்காக கட்சி ஆரம்பிக்கிறார்.. இப்படி எல்லாருமே தங்களுடைய சுயலாபத்துக்காக தான் ஆரம்பிச்சாங்க என இவர் பேசும் வசனங்கள் சிறப்பு

இதில் சின்ன சின்ன நடிகர்கள் நடித்திருப்பதால் பெரிதாக கவனம் பெறவில்லை எனலாம்.. இதையே பெரிய நட்சத்திரங்கள் நடித்து இந்த வசனங்கள் பேசி இருந்தால் படத்தின் வெற்றி மாஸ் காட்டி இருக்கும்.

டெக்னீஷியன்கள்…

எத்தனை அரசியல் படங்கள் வந்திருந்தாலும் கட்சித் தலைவன் பற்றிய கேரக்டர் தான் பெரிதாக பேசப்படும்.. ஆனால் இந்த படத்தில் ஒரு தொண்டனின் வலி காட்டப்படுகிறது.. அதை மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் இந்த படத்தை பார்க்கும் தொண்டர்கள் திருந்தினால் தலைவனும் திருந்துவான் இந்த நாடும் உருப்படும்.

இரண்டு பாடல் காட்சிகள் ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற டூயட் பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வருகிறது.

இன்னொரு பாடல் ‘கட்சிக்காரன் கட்சிக்காரன் ‘ என்ற பாடல் இவன் கேள்வி கேட்கும் கட்சிக்காரன் என கூறுகிறது.

சில காட்சிகள் நாடகத்தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. முக்கியமாக கட்சிக் கூட்டம்.. மேடை அமைப்பு என காட்டப்படும் காட்சிகள் சின்ன பட்ஜெட் படம் என்பதை உறுதி செய்கிறது.

காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.

ஆக.. கட்சிக்காரன்… தலைவனை தகர்க்கும் தொண்டன்

இப்படத்தில் விஜித் சரவணன் ,ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி, சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ப.ஐயப்பன் இயக்கியுள்ளார். சரவணன் செல்வராஜ் தயாரித்துள்ளார்.இணை தயாரிப்பு மலர்க்கொடி முருகன்.. மதன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரோஷன் ஜோசப், சி.எம். மகேந்திரா இசை அமைத்துள்ளனர்.

விஜயானந்த் விமர்சனம் 4/5.; உழைப்பின் முகவரி

விஜயானந்த் விமர்சனம் 4/5.; உழைப்பின் முகவரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய் சங்கேஷ்வர் என்ற கர்நாடக தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு இது. 1996ல் கர்நாடகாவில் முதல் பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

ஒருவன் முன்னேற நினைத்தால்… விடாமல் முயற்சித்தால்… தோல்வி அடைந்தாலும் முயற்சித்துக் கொண்டே இருந்தால் அவன் வாழ்வில் சிகரத்தை தொடுவான்… உண்மையான உழைப்பே உயர்வு தரும்.. என்பதே ஒன்லைன்..

நாயகன் விஜய்யின் அப்பா நடித்திருக்கிறார் ஆனந்த் நாக்…

கதைக்களம்…

அப்பா வழியில் குடும்பத் தொழிலான பிரின்டிங் பிரஸ்சில் பணிபுரிகிறார் ஹீரோ விஜய .

ஒரு கட்டத்தில் லாரி வாங்கி அதை ஓட்டி வியாபாரம் செய்ய நினைக்கிறார். முதலில் அந்த குடும்பம் மறுக்கவே போராடி கடன் வாங்கி லாரி வாங்கி ஓட்டுகிறார்.

இவருக்கு போட்டியாக பிரபல நிறுவனம் பல தடங்கல்களை கொடுக்கிறது. அதனை எல்லாம் முறியடித்து லாரிகளை நிறைய வாங்கி முன்னணி தொழில் அதிபராக உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் இவரது வியாபாரத்தை சாய்க்க சில மீடியாக்கள் துணை போகின்றன. எனவே அதனை முறியடிக்க தினசரி நாளிதழ் தொடங்குகிறார்.

அதுவும் ஒரு வருடத்திற்குள் பல லட்சம் காப்பி நாளிதழ்களை விநியோகம் செய்வேன் என சவால் விடுகிறார்..

அத்துடன் ஒரு ரூபாயில் நாளிதழை விற்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

இதிலும் சிலர் பிரச்சினை உருவாக விஜய் என்ன செய்தார்? அவர் நினைத்தப்படி சாதித்தாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதான் இந்த விஜயானந்த்.

கேரக்டர்கள்…

விஜய் சங்கேஷ்வர் கேரக்டரில் நிஹால். எங்குமே குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவான தேர்வு. ஒரு பக்கம் திமிராக தோன்றினாலும் தன்னம்பிக்கையின் மறு உருவமாய் ஜொலிக்கிறார் நிஹால்.

மகன் ஆனந்த் சங்கேஷ்வராக பாரத் போபனா, விஜய்யின் மனைவி லலிதாவாக சிரி பிரஹலாத் உள்ளிட்டோர் கச்சிதம்.

கணேஷ் அண்ணாச்சியாக வரும் அந்த நபரும் கெத்தாக நடித்திருக்கிறார் நேர்மையாக உழைப்பவனுக்கு உதவும் உயர்ந்த மனிதராக அடையாளம் காட்டி இருக்கிறார்.

டெக்னீஷியன்கள்..

ரிஷிகா சர்மா என்ற பெண் இயக்குனர் அந்த படத்தை இயக்கியிருக்கிறார் 1960 70 80 90 2000 என பல்வேறு காலங்களுக்கு ஏற்ப படத்தின் கதையையும் ஆடை அலங்காரத்தையும் செட்டு உபகரணங்களையும் அழகாக படம் பிடித்துள்ளார்.

முக்கியமாக படத்தின் ஆடை அலங்காரம் செட் பணிகள் என அனைத்தும் நம்மை 60 வருடங்களுக்கு முன்பு கொண்டு செல்கிறது.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு, கோபி சுந்தர் பின்னணி இசை, ஹேமந்த்குமார் படத்தொகுப்பு என அனைத்தும் நேர்த்தி.

இந்தப் படத்தை தமிழில் டப் செய்வது என முன்பே முடிவு செய்து இருந்தால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் சில விஷயங்களை இணைத்து இருக்கலாம். நிறைய இடங்களில் கன்னட படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

உண்மையான உழைப்பு உயர்வு தரும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்

ஆக விஜயானந்த் – உழைப்பின் முகவரி.

வரலாறு முக்கியம் 3.25/5.. வயசுக் கோளாறு அவசியம்..

வரலாறு முக்கியம் 3.25/5.. வயசுக் கோளாறு அவசியம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நடிகர்கள் – ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா
இசை – ஷான் ரகுமான்
இயக்கம் – சந்தோஷ் ராஜன்

காதலியை காணச் செல்லும் காதலன் காண்டம் வாங்கி சென்றதால் ஏற்படும் பிரச்சனை தான் இந்தப் படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்..

2050 ஆண்டில் கதை தொடங்குகிறது.. மொட்ட ராஜேந்திரனிடம் விடிவி கணேஷ் காதல் கதையை சொல்லுவதாக படம் தொடங்குகிறது.

ஜீவா ஒரு ஜாலியான பேர்வழி. இவருக்கு காம விஷயங்களில் ஆலோசனை சொல்பவர் விடிவி கணேஷ். இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவாவை அவரது அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் திட்டுவது வழக்கம்.

ஒரு கட்டத்தில் ஜீவா வசிக்கும் அதே தெருவில் யமுனா ஜமுனா என இரு கன்னிப் பெண்களை கொண்ட மலையாளி குடும்பம் குடி வருகிறது.

முதலில் தங்கை ஜமுனாவை பார்த்ததும் ஜீவா சைட் அடிக்கிறார். அதன் பிறகு தான் அவளது அக்கா காஷ்மீராவை பார்க்கிறார். காதல் கொள்கிறார்.

இப்படியாக ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் இரவு நேரத்தில் தன்னை பார்க்க வீட்டுக்கு அழைக்கிறார் கஷ்மீரா.

அப்போது கணேஷ் சொன்னதன் பேரில் போகும்போது ‘காண்டம் கொண்டு செல்கிறார்..்என்னை பார்க்க வரும் நீ காண்டம் கொண்டு வருகிறாய் என்றால் என்னை நீ காதலாக பார்க்கவில்லை காமத்தோடு தான் பார்க்கிறாய் என சண்டை போடுகிறார்.

இதனால் காதலர்களுக்கு பிரிவு வருகிறது.. அதன் பிறகு என்ன ஆனது என்பதே இந்த வரலாறு முக்கியம்.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு SMS பட பாணியில் ஒரு காமெடி மற்றும் காமெடி விருந்து படைத்துள்ளார் ஜீவா.

மலையாளி பெண்ணிடம் கெஞ்சுவதும் மலையாளம் கற்று கொஞ்சுவதும் என இந்த குளிருக்கு ஜில்லென்று சூடேற்றி இருக்கிறார் ஜீவா. முக்கியமாக ஜீவா பெண் வேடமிட்டு வரும் காட்சிகள் செம சூப்பர்.

நாயகிகள் இருவரும் மலையாளியாக நம்மை கொல்கின்றனர். காஷ்மீரா பர்தேஷி தங்கையாக பிரக்யா நக்ரா. இருவரும் அழகான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆலோசகர் வரும் வீடிவி கணேஷ் வேற லெவல்.. எப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு ஒரு ஆலோசகராக இருந்தாரோ அதையெல்லாம் தாண்டி இந்த படத்தில் வயாகரா சாப்பிடும் அரசியல்வாதியாக வெளுத்து கட்டி இருக்கிறார்.

இவர்களுடன் கே எஸ் ரவிக்குமாரின் முன்னாள் காதலி என படம் முழுவதும் கலகலப்பாக செல்கிறது.

சரண்யா பேசும் வசனம் சூப்பர்.. கல்யாணம் ஆன ஆண்களுக்கு பல ஆட்டோகிராஃப் இருக்கலாம்.. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆட்டோகிராஃப் இருக்கக் கூடாதா? என அவர் கேட்கும்போது பெண்களே விசிலடிப்பார்கள்..

மலையாள அப்பாவாக சித்திக் நடித்துள்ளார். அவருக்கான காட்சிகளில் சிறப்பு. இவரின் மனைவியாக நடித்தவரும் கேரளத்து அழகு சேச்சி..

டெக்னீஷியன்கள்…

படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன. வழக்கம் போல ஒரு காதல் பாட்டு.. ஒரு சரக்கு பாட்டு என கலகலப்பு சேர்த்துள்ளார்.

ஆனால் இது போன்ற காம நிறைந்த காதல் படத்தில் அழகான மெலோடி கொடுத்திருக்கலாம்.. ஐட்டம் பாட்டும் கொடுத்திருக்கலாம். அதை தவற விட்டுள்ளார்.

படத்திற்கு ஒளிப்பதிவு பெரும் பலம். மலையாள குட்டிகளை காட்டும் போது கேமரா மேன் ரசித்து ரசித்து காட்டியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் என்றாலும் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்து சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர்.

2050ல் கதை தொடங்குவதால் அதற்கேற்ப சில நகைச்சுவை காட்சிகளையும் இணைத்துள்ளார்.. பழம்பெரும் நடிகர் சிம்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் பார்ட் 2 வருமா என ஏங்கி நிற்கிறார்?! எனவும் ஆர்யா எங்கப்பா.. அவரு எங்கயாச்சும் சைக்கிள் ஓட்டிட்டு இருப்பாரு எனவும் கலகலப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் உள்ள படம் என்பதனால் வரலாறு முக்கியம் என டைட்டில் வைத்தார்களே என்னவோ அதற்கான காரணம் இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்..

ஆக வரலாற முக்கியம்.. வயசுக் கோளாறு அவசியம்..

FIRST ON NET நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.; வடிவேலு ரிட்டர்ன்ஸ்? ரிட்டையர்டு.?

FIRST ON NET நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.; வடிவேலு ரிட்டர்ன்ஸ்? ரிட்டையர்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, பாலா, தங்கதுரை, இட்டிஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒன்லைன்…

பணக்கார வீட்டு நாயை கடத்தி விலை பேசி அவர்களையே மிரட்டும் வடிவேலுக்கும் வசதியான பெண்களை கடத்தி பெற்றோரை மிரட்டும் ஆனந்தராஜுக்கும் இடையே நடைபெறும் மோதலே இந்த கதை.

கதைக்களம்..

பணக்கார வீட்டுப் பெண்களை கடத்தி பணம் பறிப்பது ஆனந்தராஜின் வழக்கம். இதுபோல பணக்கார வீட்டு நாய்களை கடத்தி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது வடிவேலுவின் வழக்கம்.

ஒரு கட்டத்தில் ஆனந்தராஜ் வீட்டு நாயை கடத்தும் போது அவரின் காரையும் சேர்த்து கடத்தி விடுகிறார் வடிவேலு.

தன் பண கஷ்டத்திற்காக அந்த காரை அடமானம் வைத்து சேட் ஒருவரிடம் இரண்டு லட்சம் பணம் பெறுகிறார்.

அந்த சூழ்நிலையில் காரை தேடி அலையும் ஆனந்தராஜ் வடிவேலுவை கண்டு பிடிக்கிறார். அந்த கார் எங்கே? அந்த காரில் நான் வைத்திருந்த 10 கோடி ரூபாய் பணம் எங்கே? என கேட்கிறார்.. திருப்பித் தரவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

ஆனால் அந்த சேட் மாயமாகி விடுகிறார். இந்த நிலையில் தான் வடிவேலுக்கு தன் குடும்ப பிளாஷ்பேக் தெரிய வருகிறது.

அதன் மூலம் நிறைய பணம் சொத்து கிடைக்கும் என நம்புகிறார் வடிவேலு.

அந்த பிளாஷ்பேக் என்ன.? வடிவேலுவை கொன்றாரா ஆனந்தராஜ்? வடிவேலு என்ன செய்தார் என்பதே கதை.

கேரக்டர்கள்…

வடிவேல் காமெடி சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. நிறைய பழைய காமெடி சீன்களை நினைவு படுத்துகிறார்.

ஆனால் குழந்தைகளை பெரியளவில் கவரும் என நம்பலாம். வடிவேலு காஸ்ட்யூம் கூட கடுப்புதான்.. இவருக்கு 2 சிஷ்யர்.. 1 சிஷ்யை.. அதில் கிங்ஸ்லி காமெடி கொஞ்சம் ஓகே.

ஆனால் ஆனந்தராஜனின் காமெடி பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகியுள்ளது.. ஆனந்த்ராஜ் அறிமுகமே சூப்பர். ஜெயில் அலப்பறை வேற லெவல்..

இந்த குளிருக்கு சில்லென்னு கவர்கிறார் ஷிவானி… இவருக்கு காட்சியும் குறைவு.. ஆடையும் குறைவு..

சிவாங்கி, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலா, தங்கதுரை, இட்டிஸ் பிரசாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். பாடல்கள் கவரவில்லை… பிரபுதேவா நடனமைத்த ‘அப்பத்தா…’ பாடலுக்கு பெரிய செட் பிரம்மாண்டம் தேவையில்லை.. ஈர்க்கவும் இல்லை..

ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துள்ளார். படத்தின் பின்னணி இசை ஒளிப்பதிவு பாராட்டும் படி உள்ளது.

சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாலித்துள்ளது.

மைனஸ்…

வடிவேலு பிறக்கும்போதே அந்த நாய் பெரிய நாயாக இருக்கிறது. குட்டி நாயாக கூட காட்டவில்லை….

வடிவேலு பெரிய ஆளான பிறகும் நாய் அப்படியே இருக்கிறது. நாயின் ஆயுட்காலம் எவ்ளோ..?? 15 வருடம் இருக்கும்.. படத்தின் ஆணிவேரே இதுதான்.. ஆனால் இதை யாருமே் கவனிக்கலையா.?

இந்த லாஜிக் வேண்டாம்.. என நீங்கள் நினைத்தால் படம் பார்க்கலாம்…

விட்னஸ் விமர்சனம் 3.75/5.; மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

விட்னஸ் விமர்சனம் 3.75/5.; மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

மனிதனின் மலக்குழியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்த தன் மகனுக்காக நீதி வேண்டி போராடும் தாயின் கதை தான் இந்த விட்னஸ்.

கதைக்களம்..

துப்புரவுப் பணியாளர் ரோகிணி. கணவனை இழந்த இவருக்கு ஒரே மகன். கஷ்டப்பட்டு தன் மகனை கல்லூரி வரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் இவர் இரவு நேர பணிக்கு செல்கிறார். காலையில் வீட்டிற்கு வரும்போது தன் மகனின் மகனின் மரணச் செய்தியை கேட்டு அறிகிறார்.

ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும் போது குடிபோதையில்அவன் இறந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன் மகன் குடிக்க மாட்டான். அந்த வேலைக்கு செல்பவன் அல்ல எனக் கூறுகிறார் ரோகிணி. ஆனாலும் நிரூபிக்க முடியாமல் போராடுகிறார்.

இதனிடையில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தைரிய பெண்ணான ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிசிடிவி காட்சிகளை ரோகிணிக்கு கொடுக்கிறார்.

அதன் பின்னர் ரோகினி கம்யூனிஸ்ட் தோழர்கள் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார்.

நீதிமன்றத்தில் கீழ் சாதி பிரிவினருக்கு நீதி கிடைத்ததா? அல்லது அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு கைக்கூலியாக மாறியதா? காவல்துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் என்ன செய்தார்கள்? என்பதே நீதி(நீதியற்ற) கதை..

கேரக்டர்கள்…

ஏழை கீழ் ஜாதி பெண்மணியாக தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ரோகினி.. அதற்கு ஏற்ப உடல் மொழியும் வாய் மொழியும் பேசி அசத்தியிருக்கிறார்.

தன் மகனுக்கு நீதி கிடைக்க அவர் போராடும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பு…

அப்பார்ட்மெண்ட் வாசிகளை எதிர்த்து போராடும் பெண்மணியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நம்மிடம் பாராட்டுகளை பெறுகிறார்.

வக்கீலாக வரும் சண்முகராஜன் நீதிக்குப் போராடும் மனிதராக உயர்ந்து நிற்கிறார். காண்ட்ராக்டர் தன் உறவினரே என்றாலும் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.

நம் வீட்டு கக்கூசை சுத்தம் செய்ய நாமே தயங்கும்போது மனித கழிவுகளை அகற்றும் அந்த தொழிலாளர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டாமா என கேட்கும் காட்சிகள் சிறப்பு.

பொறுப்பைத் தட்டிக் கடிக்கும் உயர் அதிகாரியாக அழகம்பெருமாள். அரசு அதிகாரிக்கே உரிய அதிகாரம் தெனாவெட்டு நிதானம் அனைத்தையும் ஒருமித்த உணர்வோடு செய்திருக்கிறார்.

இவர்களுடன் அந்தச் சேரியில் போராடும் வினோத் சாகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் & கம்யூனிஸ்ட் தோழர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

மக்களுக்காக போராடும் ஒருவனுக்கு வீட்டில் கிடைக்கும் மரியாதையும் அவர்கள் குடும்பம் படும் அவஸ்தைகளையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தீபக்.. இவரே ஒளிப்பதிவாளர் என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகளையும் கேமரா ஆங்கிள்களையும் வைத்து பலம் சேர்த்துள்ளார்.

முக்கியமாக படத்தின் கோர்ட் காட்சிகள் அசத்தல் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் மத்தியில் நீதியரசர் அமரும் போது நீதியின் நிலை குறித்து அந்த ஒற்றைக் காட்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பார்த்திபன் இறந்த பிறகு ஒலிக்கும் அந்த மரண பாட்டும் பேசும் வசனங்களும் இடைஞ்சலாக உள்ளது.. இசையை குறைத்து வசனங்களுக்கு கவனம் செலுத்தி இருக்கலாம்.. மற்றபடி உணர்வு மிக்க பாடல்களை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார்.

Producer – TG Vishwa Prasad
Co-Producer – Vivek Kuchibhotla

Screenplay – Muthuvel, JP Sanakya

பாடல்களை கபிலன் ராஜ் எழுதியிருக்கிறார். எடிட்டிங் செய்திருக்கிறார் பிலோமீன் ராஜ். இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பு.

மலக்குழியில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் ஒவ்வொன்றையும் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இதற்கு தீர்வே கிடையாது..

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் உருவாகும்.. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே நம் எல்லோருடைய மனதிலும் எழும் பெரும் கேள்வியாகும்.

ஆக இந்த விட்னஸ்… மத்திய மாநில அரசுகளின் வீக்னஸ்

குருமூர்த்தி விமர்சனம்.. மீசைய முறுக்கினா போதுமா?

குருமூர்த்தி விமர்சனம்.. மீசைய முறுக்கினா போதுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ராம்கி மிகப்பெரிய தொழில் அதிபர் இவரிடம் உள்ள ஐந்து கோடியை எடுத்துக்கொண்டு காரில் பயணிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் அருந்த காரை விட்டு இறங்க அந்த நேரத்தில் ஒரு கும்பல் இவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறது

இதனையடுத்து அவர் போலீஸ் நட்டியிடம் புகார் தெரிவிக்க அதனை தேடி அலைகிறது காவல்துறை.

போலீஸ் நட்டி, ரவி மரியா மனோபாலா ஆகியோர் அந்த பணப்பெட்டியை தேடி ஊட்டி முழுவதும் அலைக்கின்றனர்.

இதனிடையில் பணப்பெட்டியை அந்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்க வேறொரு கும்பல் திட்டம் போடுகிறது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.

இறுதியில் அந்த பணப்பெட்டி ராம்கிக்கு கிடைத்ததா? போலீஸ் திட்டம் என்ன ஆனது? கொள்ளை கும்பல் திட்டம் என்ன என்பதே கதை.

கேரக்டர்கள்…

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நட்டி நடித்து இருக்கிறார். இவரின் மனைவி பூனம் பஜ்வா. கம்பீரமான போலீசாக தன்னை தன் உயரத்திற்கு ஏற்ப உயர்த்தி காட்டியுள்ளார் நட்டி நட்ராஜ்.

நட்டிக்கும் பூனம் பஜ்வாவுக்கும் உள்ள கிள்மா பாடல் மார்கழி குளிரில் செம மஜா.

ரவி மரியா மனோபாலா காமெடி நமக்கு எரிச்சலை தருகிறது.

பின்னணி இசை இரைச்சலை கொடுக்கிறது. நட்டியை நேர்மையான அதிகாரியாக காட்ட தேவையில்லாத சண்டை காட்சிகளை திணித்துள்ளனர்.

நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக போலீஸ் ஜீப் பயணிக்கும் காட்சியும் பூனம் வஜ்வாவின் அம்மா பேசும் மருத்துவமனை காட்சிகளும் அப்படியே உள்ளன.

மொட்ட ராஜேந்திரன் காமெடி செய்வார் என்று பார்த்தால் அவரும் நம்மை வெறுப்பேற்றுகிறார்.

ஒரு குத்துப்பாட்டுக்கு சஞ்சனா மற்றும் அஸ்மிதா உடன் ஆட்டம் போடுகிறார். மஸ்காரா புகழ் ஆட்டக்காரியின் கிளுகிளுப்பான பாடல் செம ஹாட்..

ஒரு பணப்பெட்டியை தேடி கும்பல் அலையும் கதையை இன்னும் சுவாரசியமாகவும் காமெடியாகவும் கொடுத்திருக்கலாம். ஆனால் திரைக்கதை அமைப்பதிலும் காட்சி அமைப்பதிலும் தடுமாறி இருக்கிறார் டைரக்டர் தனசேகர்.

நீ உழைத்த பணம் மட்டுமே உனக்கு சொந்தம்.. அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படாதே என்ற சிறப்பான கருத்தை வலியுறுத்தினாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார்.

சத்யதேவ் உதயசங்கர் இசையமைக்க தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஆக குருமூர்த்தி… மீசைய முறுக்கினா போதுமா?

More Articles
Follows