தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
இராமநாதபுரத்து மாவட்ட இளைஞராக ரணசிங்கம் (விஜய்சேதுபதி).
தண்ணீர் பிரச்சினை முதல் ஊர் பிரச்சனைகளுக்கெல்லாம் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். இதனால் (அலட்சியமான) அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்கிறார்.
நாயகி அரியநாச்சி (ஐஷ்வர்யா ராஜேஷ்) உடன் ஒரு பக்கம் காதல் செய்கிறர்.
என்னதான் ஊர் பிரச்சினைக்காக ரணசிங்கம் போராடினாலும் சுயநலமான மக்கள் ஒரு கட்டத்தில் ரணசிங்கத்தை விட்டு விலகிவிடுகின்றனர்.
தன்னுடன் யாரும் நிற்கவில்லையே என வருத்தப்படும் ரணசிங்கம் இனி இது வேலைக்கு ஆகாது என மனைவியின் பேச்சை கேட்டு துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.
ஆனால் அங்கு ஒரு கலவரத்தில் ரணசிங்கத்திற்கு பிரச்சினை.
இதனால் இந்தியாவில் கையில் குழந்தையுடன் கணவரை பார்க்க முடியாமல் போராடுகிறார். எத்தனை அரசு அதிகாரிகளை பார்த்தாலும் கணவரின் முகம் காணமுடியவில்லை. இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
‘சீதக்காதி’ படத்தை போல சிறப்பு தோற்றத்தில் வருகிறார் விஜய்சேதுபதி. அதே சமயத்தில் தன் டிரேட் மார்க் நடிப்பை கொடுத்துள்ளார். முதல் பாதியில் ரணசிங்கம் என்றால் 2ஆம் பாதி அரியநாச்சி தான்.
கதையை தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டை, கனா படங்கள் வரிசையில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.
விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்
படத்தின் மெயின் ஹீரோ ஐஷ்வர்யா ராஜேஷ் தான் என சொல்லிவிடலாம். கல்யாணம் முதல் கணவனை மீட்க போரட்டம் வரை சிக்ஸர் அடித்துள்ளார் அரியநாச்சி. இதுபோன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் ‘அரிய’வர்களே..
விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்துள்ளார். முதல் படத்திலேயே நல்ல நம்பிக்கையளித்துள்ளார்.
மாவட்ட கலெக்டராக ரங்கராஜ் பாண்டே வருகிறார். இவரின் 2வது படத்திலும் நல்ல ரோல் கிடைத்துள்ளது. அதையும் சரியாக செய்துள்ளார்.
பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா கலக்கியிருக்கிறார்.
மனிதர்களாக பூ ராமு, வேல ராமமூர்த்தி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா என ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டர்களில் கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி நம் கவனம் ஈர்க்கிறார் ஜிப்ரான். கதைக்கு ஏற்ற இசையை மண்வாசத்துடன் கலந்துக் கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்… காட்சிகளை மீண்டும் பார்க்க மாட்டோமா? என ஏங்க வைத்துள்ளார். நேர்த்தியான படப்பிடிப்பு. வறண்ட நிலமாகட்டும் இரவு நேர கிராமத்து காட்சிகளாகட்டும் இரண்டையும் திறம்பட கொடுத்துள்ளார்.
எடிட்டர் தன் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது-
சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
இயக்குனர் விருமாண்டி.. தன் பெயருக்கு ஏற்ப தன் கதையிலும் காட்சியிலும் வசனத்திலும் கம்பீரத்தை கொடுத்துள்ளார்.
பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்த பெரிய கருப்பத் தேவரின் மகன்தான் இந்த இயக்குனர்.
தன் முதல் படத்திலேயே தமிழக தண்ணீர்ப் பிரச்சினையை துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.
தண்ணீர்ப் பஞ்சம் எப்படி ஏற்பட்டது? கருவேல மரங்களால் வரும் பிரச்சினைகள்… விவசாயிகள் நஷ்டம்.. வேளாண்மை செய்ய முடியாமல் போக என்ன காரணம்? என்பதையெல்லாம் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
கிராமத்து பக்கமே போகாத பலருக்கும் இது புது அனுபவத்தை கொடுக்கும்.
வசதியாக வாழ நினைத்தும் இந்தியாவில் பிழைக்க வழியில்லாமலும் தங்கள் பிள்ளைகளை, தங்கள் கணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பார்க்க வேண்டிய பாடம் இது.
ஆக… கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்படம்.. நிச்சயம் மனசை ரணமாக்கும்.
Ka Pae Ranasingam movie review rating