தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
களவாணித்தனம் செய்து கொண்டு 3 நண்பர்களுடன் சுற்றித் திரியும் நாயகன் வெற்றி. இதனால் இவரை போலீஸ் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஐயப்பன் கோவிலுக்கு சென்று திடீரென சபரிமலைக்கு மாலை போடுகிறார்.
அதன் பின்னர் கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் இந்த நால்வரும் ஒரு இடத்தில் உறங்குகின்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்கும் ஹரிஷ் பெராடி அவர்கள் வெற்றிக்கு லாட்டரி சீட்டு வாங்க சொல்லி வற்புறுத்துகிறார்.
சரி என நினைத்து அவர் மேல் இரக்கப்பட்டு ரூ. 300 கொடுத்து பம்பர் லாட்டரி சீட்டை வாங்குகிறார். ஆனால் அந்த இடத்திலேயே அதை மறந்து தொலைத்து விட்டு தன் சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பி விடுகிறார் வெற்றி.
அதிகாலையில் அந்த லாட்டரி சீட்டு கையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு செல்கிறார் ஹரிஷ் பெராடி.
அப்போதுதான் வெற்றி வாங்கிய சீட்டுக்கு ரூ. 10 கோடி கிடைத்துள்ளது என்பது ஹரிஷ் பெராடிக்கு தெரிய வருகிறது.
எனவே அந்த லாட்டரி சீட்டை வெற்றிக்கு கொடுக்க வேண்டாம் என ஹரிஷ் மகன் மனைவி மகள் மருமகன் என அனைவரும் பிரச்சனை செய்கின்றனர்.
ஆனால் இது அந்த ஐயப்ப பக்தருக்கு அல்லாஹ் கொடுத்த பம்பர் பரிசு அதை நான் தட்டிப் பறிக்க கூடாது என நினைக்கும் அவர் வெற்றியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி செல்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? தூத்துக்குடியில் வெற்றி கண்டுபிடித்தாரா.? ஹரிஷ் உறவினர்கள் என்ன செய்தனர்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
எட்டு தோட்டாக்கள் ஜீவி, ஜீவி 2 என படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தனக்காகவே ரெடியானது போல வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் வெற்றி.
பொறுக்கி தனம் செய்யும் வெற்றி அந்த புலிப்பாண்டி கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.. எங்கும் மிகப் படுத்தப்படாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
10 கோடி தனக்கு அடித்துள்ளது என தெரிந்த பின் அவரிடம் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சாமானியனின் பேராசையை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறது.
அதுபோல வெற்றிக்கு 10 கோடி கிடைத்துள்ளது என்பதை அறிந்த அவர்களது நண்பர்களும் அவரது உறவினர்களும் ஏற்படும் மாற்றங்களை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.
வெற்றி நண்பர்களாக வரும் தங்கதுரை திலீப் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை மிகச் சரியாக செய்துள்ளனர். அதிலும் வெற்றிக்கு கார் ஓட்டுபவராக வரும் திலீப் பணத்தால் திடீர் மனம் மாறுவது அவரது வில்லத்தனத்தை காட்டுகிறது.
சுந்தரபாண்டி ஆக வரும் ஜி பி முத்து இடைவேளைக்கு முன்பு வரை மட்டுமே வந்தாலும் அதை அழகாக செய்து இருக்கிறார்.. தன் சுந்தரபாண்டி கேரக்டரை துப்பாக்கி பாண்டியாகவும் மாற்றி கலகலப்புக்கு கேரண்டி கொடுத்திருக்கிறார்.
டிவி சீரியல் பிக் பாஸ் ஆகியவை மூலம் பிரபலமான ஷிவானி இதில் தூத்துக்குடி பெண்ணாகவே தூக்கலான நடிப்பை கொடுத்துள்ளார். நாம் அன்றாடம் பார்க்கும் பெண்ணாகவும் பொறுக்கித்தனத்தை விரும்பாத மகளாகவும் வருகிறார்.
வெற்றியின் அம்மாவாக நடித்துள்ள கூத்துப்பட்டறை ஆதிராவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
இந்தப் படத்திற்கு அறம் சேர்த்தவர் போல் ஆணிவேராக இருந்துள்ளவர் ஹரிஷ் பெராடி.. நிச்சயம் அவரின் நடிப்புக்கு பல விருதுகள் கிடைக்கும்.
எந்த சூழ்நிலையிலும் அறம் மாறாமல் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவர் மேற்கொள்ளும் ஒவ்வொன்றும் அசத்தல்.
டெக்னீசியன்கள்…
பணம் இருந்தால் பந்தம் வந்து சேரும் பகையும் வந்து சேரும் என்பதை நெற்றியில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.
கார்த்தி நேதா எழுதிய பாடல்கள் அனைத்தும் கதையுடன் பயணிப்பதால் அனைத்தும் நம்மை தியேட்டர் சீட்டை விட்டு எழுந்து விடாமல் ரசிக்க வைக்கிறது.
காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. எந்த இடத்திலும் கத்தரி போட வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து அழகாக கொடுத்திருக்கிறார்.
முத்தையாவிடம் உதவியாளராக பணிபுரிந்து இந்த முதல் படத்தை இயக்கி இருக்கிறார் செல்வக்குமார். தூத்துக்குடி கதைகளத்தை கொண்டு வெற்றி – சிவானி – கவிதா பாரதி முதல் அனைவரையும் தூத்துக்குடி பாஷையை பேச வைத்து அந்த ஊருக்கே நம்மை அழைத்துச் சென்று இருக்கிறார்.
ஆக குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
Bumper movie review and rating in tamil