தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்தார்.
எனவே இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி தரப்பில், தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.
அப்போது, விஷால் தரப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர்.
இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை.
இதையடுத்து, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகி விட்டனர்.
we are not interested to continue nadigar sangam case says high court judges