தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற
*நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது,*
“சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் ஒரு மனிதனாக, இந்த கலைத்துறையில் ஒரு மேதாவி கேப்டன் விஜயகாந்த் நடித்த அதே கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவருடைய ரசிகனாக, அவர் இயங்கிக் கொண்டிருந்த இந்த நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, ஒரு பொதுச் செயலாளராக தேமுதிகவிற்கு வாக்களித்த ஒரு வாக்காளராக எல்லா வகையிலும் இங்கு வந்தவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் சொல்வது போல ஒருவர் இறந்த பின்பு தான் அவரை சாமி என்று சொல்வார்கள். வாழும்போதே சில மனிதர்கள் தான் அப்படி பெயர் வாங்குவார்கள். அப்படிப்பட்டவர் தான் நம் கேப்டன்.
படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் சரிசமமான சாப்பாடு கிடைக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தியவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் நாங்களும் இப்போது முயற்சி செய்து வருகிறோம்.
விஜயகாந்த் அண்ணன் மறைவின் போது, நாங்களும் கூட இருந்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நானும் கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சண்முகபாண்டியனிடம் நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. கேப்டன் வளர்ந்து வந்த பல நடிகர்களுக்கு ஒரு தூணாக நின்று அவர்களை வளர்த்து விட்டார்.
உங்க வீட்டுப் பிள்ளையாக நான் சொல்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உனக்கு இருந்தால், நான் வருகிறேன்.. எப்படி கேப்டன் அண்ணன் பலருக்கு துணையாக நின்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்தாரோ அதேபோன்று என்னை நீ பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசையாக இருந்தால் நான் இருக்கிறேன் உனக்காக..
நீயும் இதே போன்று ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. அதை நான் ஒரு பரிகாரமாகவே நினைத்துக் கொள்கிறேன்.
அவரை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தோன்றும் ஒரே விஷயம் அவரது தைரியம். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மனதில் இருந்து தான் பேசுவார். நான் அவரை நேரில் சந்தித்தபோது அருகில் இருந்த பிரேமலதா அம்மா, நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது தன்னுடைய நகைகளை எல்லாம் பீரோவில் இருந்து எடுக்க செய்துவிட்டு அந்த பத்திரத்தை பொக்கிஷமாக அதில் வைத்து பாதுகாத்தார் கேப்டன்.. அந்த அளவிற்கு சங்கத்தின் மீது ரொம்பவே ஈடுபாட்டுடன் இருந்தார் என்று கூறினார்.
அனைவரும் சொல்வது போன்று இந்த தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் அனைவரும் மிஸ் பண்ணுகிறோம். சினிமாவில் ஈகோ இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அப்படி ஈகோ இல்லமால் இருந்த ஒருவர்தான் விஜயகாந்த்.
54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த் தான். 54 வீடுகளில் விளக்கேற்றியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வேறு எந்த நடிகருக்கும் இந்த தைரியம் வராது. இயக்குனராக வேண்டும் என நினைத்தபோது, திரைப்பட கல்லூரியில் சேர வேண்டும் என்கிற ஆசை வந்ததும், இயக்குநர் ஆர்கே செல்வமணியிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கும் காரணம் கேப்டன் தான். எங்களைப் போன்ற நடிகர்கள் மீது புகார்கள் இருக்கும்.. ஆனால் எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாத நடிகர் விஜயகாந்த் ஒருவர் தான்” என்று கூறினார்.
*கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் பேசும்போது,*
“நான் முதல்முறையாக சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் தனத்தை என்ன சொன்னார் என்றால், எல்லோரும் வருவதற்கு முன்பே 6 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே அங்கே இருக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் தயாரிப்பாளர் நம்மால் நஷ்டமடைய கூடாது அதேபோல இயக்குனருக்கும் பக்கபலமாக இருந்து வேலைகளை முடிக்க வேண்டும் சொல்லி இருக்கிறார், அவர் சொன்னதை முடிந்த அளவு நான் கடைபிடித்து கொண்டு இருக்கிறேன். அதேபோல சனி ஞாயிறுகளில் எங்கள் வீடு தேடி வந்து அப்பாவை சந்திக்கும் நபர்கள் அனைவருக்கும் எங்களையும் உணவளிக்க சொல்லி ஆரம்பத்தில் இருந்தே வளர்த்தார்.
அதையே தான் இப்போதும் செய்து வருகிறோம். இனியும் தொடர்ந்து செய்வோம். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சகாப்தம். அவரது இறுதி ஊர்வலத்திற்காக திரண்ட மக்களை பார்க்கும்போதே அது தெரிந்திருக்கும். அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்ச்சி.. காரணம் அப்பாவை பொறுத்தவரை எல்லாமே சினிமா தான்.. வீடு, நடிகர் சங்கம், படப்பிடிப்பு என மாறிமாறி சுழன்றவர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
*கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசும்போது,*
“சிறுவயதில் இருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் தந்தையின் முகத்தைத்தான் அதிக முறை பார்த்துக் கொண்டிருப்பேன். இதுவரை நானும் என் தம்பியும் எந்த ஒரு நடிகர் சங்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை. இதுதான் முதன்முறையாக கலந்து கொள்ளும் நிகழ்வு. அது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. எங்கள் தந்தையின் கனவை நிச்சயமாக நானும் சண்முக பாண்டியனும் நிறைவேற்றுவோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், கடந்த பத்து வருடங்களாக அவர் மிகுந்த உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு இருந்த வில் பவர் காரணமாக அனைத்தையும் தாங்கினார். வேறு ஒரு நபராக இருந்திருந்தால் நிச்சயமாக இதை தாங்கி இருக்க முடியாது. அவர் இறக்கும் முன்பு வரை கூட நல்ல நினைவாற்றலுடன் தான் இருந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட எங்கள் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து யூடியூப்பில் அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச்சொல்லி கேட்டுக் கொண்டுதான் இருந்தார். சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது அவர் தாளம் போட்டு அந்த பாடல்களை என்ஜாய் பண்ணி கேட்டு கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதேபோல கேப்டனின் இறுதி அஞ்சலியில் நிறைய பேர் வந்திருக்கலாம். சில பேரால் வர முடியாமல் போய் இருக்கலாம். இதில் யாரையுமே நாங்கள் தவறாக நினைக்கவில்லை. அவர்கள் மீது வருத்தமும் இல்லை.. கேப்டனுக்கும் யார் மீது எந்த வருத்தமும் இல்லை” என்று கூறினார்.
Vijayakanth proved he is living God says Vishal