தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருண்.சி இயக்கத்தில் விஜய் டிவி வைஷாலினி, மொட்ட ராஜேந்திரன். ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ள படம் ஆறாம் திணை.
இதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது…
“இன்று சினிமா தயாரிக்கவேண்டும் என்றாலே பயமாக இருக்கிறது. படத்திற்கு பூஜை போட்டத்தில் ஆரம்பித்து ரிலீஸ் தேதி வரை எந்த திசையில் இருந்து என்ன பிரச்சனை வருமோ என பயந்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரே இந்தியா ஒரே வரி என சொன்னார்கள்..
ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் சினிமாவுக்கென தனியாக அதிக வரி விதிக்கிறார்கள்.
பெரிய நடிகர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இதை அரசாங்கத்துக்கு எதிரான குரலாக நினைக்கவேண்டாம்.
நமக்கான கஷ்டங்களுக்கு நாம் குரல் கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும்.
இன்று புதிதாக திரையுலகில் படம் எடுக்க வருபவர்கள் சீனியர்களான பாக்யராஜ், பேரரசு போன்றவர்களிடம் உதவிகளை கேட்கலாம்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
இதை தொடர்ந்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.
அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.
பொன்ராஜ் பேசும்போது…
தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன்.
அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?
தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு.
ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.
முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும்.
அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ்,
“பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு.. சின்ன வயசுல நான் கூட, இப்படி பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு.
ஒரு சிம்பிள் லாஜிக்.. இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களை கொன்னு பழி தீர்த்துட்டு போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே.
அப்படி ஏன் கொல்றது இல்ல..?“ என ஒரு பகுத்தறிவு கேள்வியுடன் படக்குழுவினரை வாழ்த்தி, இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.
நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் அருண்.சி பேசும்போது, “கடந்த மாதம் ஒரு கனவு வந்தது.. அந்த கனவில் நானும் படத்தின் தயாரிப்பாளரும் பாக்யராஜ் சாரிடம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். அதெல்லாம் வர முடியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிடுகிறார் பாக்யராஜ்.
ஆனால் இப்போது நிஜத்தில் நாங்கள் சென்று அழைத்தபோது, நீங்க போங்க.. நான் வந்திடுறேன் என ஒரே வார்த்தையில் சொன்னார். இந்தப்படமும் இதுபோல நிறைய ட்விஸ்ட்டுகளுடன் இருக்கும்.
என்னுடைய 12 வருட கனவு நனவாகி இருக்கிறது.
மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா இருவருமே பல சிரமங்களை பொறுத்துக்கொண்டு கடுமையான உழைப்பை இந்தப்படத்திற்காக கொடுத்துள்ளார்கள்.
விஜய் டிவி குரேஷி இந்தப்படத்தின் வசனங்களில் சில கவுன்ட்டர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார், நிச்சயம் அவை படத்தில் கைதட்டல் பெறும். இந்தப்படத்துல நடிகை லாவண்யா கண்களாலேயே பேசி நடித்தார். படத்தில் பேய்களுக்கான வழக்கமான பிளாஸ்பேக் இல்லாமல் புதிய பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறோம்” என கூறினார் அருண்.சி.