தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து லண்டன் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் திரும்பி சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:
* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.
* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.
* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.
* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு தனது தாய் சந்தியாவின் இயற்பெயரான வேதா நிலையம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
* 15 ஆண்டுகளில் 110 படங்களில் நடித்து முடித்தார் ஜெயலலிதா.
* சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.
அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.
* ஜெயலலிதாவை, 1984ல் மாநிலங்கள்வை உறுப்பினராகி, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
*எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது.
*அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது.
*எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதலமைச்சர் ஆனபோதும், தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கே ஆதரவாக இருந்தனர்.
*எனவே, ஜானகி அம்மாள் அமைச்சரவை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார்.
*ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.
* 1991 தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
*2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறினார் ஜெயலலிதா.
*2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
*2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதன்மூலம் தமிழக அரசியலில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த வரலாறு திரும்பியது.