தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர்.
இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளர் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள்.
கலைப்புலி தாணு
இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைப்புலி தாணு பேசுகையில், “அருள்பதி நியாயமானவர். நீண்ட காலம் சங்கத்தை திறம்பட நடத்தியுள்ளார்.
விநியோகஸ்தர்கள் பிரச்சினை புரிந்தவர். அவர் தலைவராக வருவதுதான் நியாயம்.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். அதை விட்டுவிட்டு இந்த சங்கத்துக்கு வருகிறார் என்றால் அதில் நிச்சயம் சுயநலமும் உள்நோக்கமும் உள்ளது.
அவர் நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை அவர் கவனிக்கட்டும். நான் விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்தவன். இந்த சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவன். இந்த சங்கத்துக்கு அருள்பதி தலைவராகத் தொடர்வதுதான் திரைத் துறைக்கு நல்லது,” என்றார்.
எஸ்வி சேகர்
ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிப் பேசும் தகுதியே நமக்கெல்லாம் இல்லை. அதுவாவது அரசியல் தேர்தல்.
ஆனால் இங்கே நடக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தலில் பணமும் தங்க காசும் தருகிறார்கள் எதிர் அணியினர். இவ்வளவு செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த பதவியில் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இந்தத் தேர்தலில் அருள்பதிதான் வெற்றிப் பெற வேண்டும். அப்போதுதான் இந்த அமைப்பு சரியான பாதையில் செல்லும். ஞானவேல் ராஜா போன்றவர்களை அனுமதிக்காதீர்கள்.