தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழர்களுக்கு எதிரான சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள சமந்தாவின் #TheFamilyMan2 இணையத் தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு சீமான் கடிதம் வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமேசான் பிரைம் தலைமையதிகாரி அபர்ணா புரோகித்திற்கு சீமான் எழுதியுள்ள கடிதத்தில்…
“தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள தொடரில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்படுகின்ற சித்தரிப்புகளும் காட்சி அமைப்புகளும் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன்.
சிங்களப் பேரினவாதம் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட சில உலக நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஒருமித்துக் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்களை கொடுத்து விட்டு, அதற்கான எந்த நீதியும் பெற முடியாத கையறு நிலையில் உலக அரங்கில் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு போராடிக் கொண்டிருக்கையில் , தமிழர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியை அங்கு நடந்த உண்மைச் செய்திகளையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் வரலாற்றில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும் , அதனை செய்யாது தமிழர்களுக்கு எதிராக நோக்கத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்து உருவாக்கங்களை கொண்டுள்ள இது போன்ற தொடர்கள் முழுக்க முழுக்க தடை செய்யப்பட வேண்டும்.
தமிழர்களின் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக எளிதாக சித்தரித்து அதனை தவறாக காட்சிப்படுத்தியிருக்கும் தி பேமிலி மேன் 2 இணைய தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதை செய்ய தவறினால் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க செய்யும் வகையில் மாபெரும் கருத்து பரப்புரையை தீவிரமாக முன்னெடுப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
NTK leader Seeman against Samantha’s The family man 2 web series