தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஜீலை 17ஆம் தேதி தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில்… “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர்.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.
தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.
இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்”
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathiraja