தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் நடிகர் திரு.’டைப்பிஸ்ட்’ கோபு (வயது 85) மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி (வயது 80) நேற்று சென்னையில் காலமானார்கள். அவர்களது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின்” மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர்களும் பழம்பெரும் கலைஞர்களுமான நடிகர் ‘டைப்பிஸ்ட்’ கோபு , நடிகை குசலகுமாரி ஆகியோர் மரணமடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
லால்குடியை சேர்ந்த திரு.கோபலரத்தினம் அவர்கள் 1959-ம் ஆண்டு ‘நெஞ்சே நீ வாழ்க’ என்ற மேடை நாடகத்தில் ‘டைப்பிஸ்ட் கோபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கதாபாத்திரத்தின் பெயரிலேயே பிரபலமானவர். 500க்கும் அதிகமான நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களால் ‘நாணல்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் அவர் திரு.எம்.ஜி.ஆர், திரு.சிவாஜி கணேசன், திரு.ரஜினி, திரு.கமல், திரு.விஜய், திரு.அஜித், திரு.கார்த்தி, திரு.விஷால் என மூன்று தலைமுறையினருடன் நடித்த பெருமைக்குரிய சாதனையாளர்.
திருமதி.குசல குமாரி அவர்கள், 1955-ல் ‘கூண்டுகிளி’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானார். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவரது நடிப்பும் நடனமும் மிகவும் பாராட்டு பெற்றது. திரு.எம்ஜிஆர், திரு.சிவாஜி, திரு.பிரேம் நசீர், திரு.என்.டி.ராம்ராவ் ஆகியோர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
அவர்களது மரணம் ஈடு கட்ட இயலாத மாபெரும் இழப்பாகும். அவர்களது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.”
# தென்னிந்திய நடிகர் சங்கம்