தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையடிப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.
பிரசன்னாவின் இந்த ட்வீட்டர் பதிவு பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் ஏன் அதிகமானது என்பதற்கான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
உண்மைதான்! ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான், மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான். அதே அளவு இதற்குமுன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்தி வருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வது போல் நான்கு மாத கணக்கீட்டாலும், மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான் எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என் ட்வீட்.
மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும் , அதன்மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப் பிரச்சினையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள்.
நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும் அதையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஊரடங்கு காலங்களில் மருத்துவ, காவல், சுகாதார துறைகள் போலவே மின்வாரிய ஊழியர்களும், அதிகாரிகளும் அயராது பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை நன்றியோடு பாராட்டவும் நான் மறக்கவில்லை.
மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மனநோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்.
பிகு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி நான் செலுத்திவிட்டேன்”.
இவ்வாறு அந்த பதிவில் நடிகர் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்