தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் திரைப்பட விநியோகஸ்தராக பலராலும் அறியப்பட்டவர் சிங்காரவேலன்.
லிங்கா நஷ்டத்தை ரஜினி திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என பல மேடைகளில் பேசி பாப்புலர் ஆனவர் இவர்.
அன்று ரஜினியை எதிர்த்து பேசியவர் இன்று ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
அடிப்படையில் சிங்காரவேலன் ஒரு கப்பல் பொறியாளர். இவருடைய நிறுவனம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் கெமிக்கல் டேங்கர் கப்பலை பராமரித்து வருகிறது.
அவர் ஸ்டெர்லைட் குறித்தும், ரஜினிகாந்த் பேசியது குறித்தும் சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் செய்திகளும், அரசியல் பிரமுகர்கள் சிலரால் கூறப்படும் தகவல்களும் திரித்து, மிகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது.
ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தி செய்யும் போது சல்பர் – டை – ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், அந்த வாயு கேன்சரை உருவாக்குவதாகவும் ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் சல்பர் டை ஆக்சைடை சல் ப்யூரிக் அமிலமாக மாற்றி கப்பல் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் காக்கிநாடா, ஒரிஸ்ஸாவில் பாரதீப், விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கு விற்று வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்பீக் உரத் தொழிற்சாலைக்கும் சல் ப்யூரிக் அமிலத்தை விற்கிறது.
ஆலையிலிருந்து வெளிவரும் தேவையற்ற வாயுவையும் அமிலமாக மாற்றி, அதனை விற்கிறது ஸ்டெர்லைட். வருமானம் தரக்கூடிய வாயுவை ஸ்டெர்லைட் ஏன் வெளியேற்ற வேண்டும்?
அதனைப் போல ஆலையிலிருந்து வெளிவரும் வாயு முதலில் குளிர்விக்கப்பட்டு, அதனை பின்னர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது. கார்பன் உள்ளிட்ட தண்ணீரில் கரையும் பொருட்கள் நீரில் கரைந்த பின்பு, வாயு மட்டும் வெளிவருகிறது.
இதிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, ஆர்சனிக் போன்றவை தனியாக பிரிக்கப்படுகிறது. எஞ்சிய நஞ்சற்ற வாயு மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
கார்பன் கலந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு, தேவைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
குறைந்த அளவு உள்ள தண்ணீர் கழிவுகள் நீராவி கொண்டு ஆவியாக்கப்படுகிறது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஸ்டெர்லைட் எந்த வித நச்சு வாயுவையும் வெளியேற்றவில்லை.
அதே வேளையில் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இதிலிருந்து வெளிவரும் வாயுக்களான கார்பன் – டை ஆக்சைடு, கார்பன் மோனாக் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை சுற்றுப்புறத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன.
களத்தில் போராடும் மற்றும் போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் அனைத்து ஆலைகளையும் நேரில் ஆய்வு செய்தால் ஸ்டெர்லைட்டை எவருமே எதிர்க்கமாட்டார்கள்.
தூத்துக்குடியில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஒரு கெமிக்கல் ஆலை உள்ளது. இங்கு டைட்டானியம் – டை – ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. அரசியல்வாதிகள் போராட கிளம்பினால் ” நியூஸ் 7 ” முகத்திரையை கிழிக்கும் என்ற பயம்.
தமிழ்நாட்டில் தொழில் நடத்தவேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு நியூஸ் சேனல் வைத்திருக்க வேண்டும் என்பதை வேதாந்தா நிறுவனம் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.
ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக எழுதியிருக்கிறானே என்று யாரும் என்னை விரோதியாக கருத தேவையில்லை.
ஸ்டெர்லைட் நிறுவனம் சல் ப்யூரிக் அமிலத்தை கப்பலில் அனுப்புகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த கப்பலை என்னுடைய நிறுவனம் தான் பராமரித்து வருகிறது.
அதனால் எனக்கு தெரிந்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை குறிப்பிடுகிறேன்.
அதைப்போல, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமூகவிரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பிட்டதை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், ரஜினிகாந்த் கூறியதில் எந்தவித தவறுமில்லை. உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.
மார்ச் மாதம் இறுதியில் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட்டிற்கான உரிமத்தை புதுப்பித்து தரவில்லை.
எனவே ஸ்டெர்லைட் நிர்வாகம் உற்பத்தி எதையும் செய்யவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்தின் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டோம். நாங்கள் கப்பலை நிறுத்தும் போது மே 30 ஆம் தேதி வரை கப்பலுக்கு தேவையான எரிபொருள், உணவு பொருட்கள், நீர், ஆகியவை இருந்தது.
மே 29 ஆம் தேதி வாக்கில் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று டீசல், நீர், உணவுப்பொருட்கள் வழங்கலாம் என திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் மே 20 ஆம் தேதிக்கு பிறகு தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ளே புகுந்து பெரிய அளவிலான தாக்குதலை நடத்த உள்ளார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த நேரத்தில் தூத்துக்குடி பகுதியில் பிரபலமாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எனவே போராட்டத்தை பயன்படுத்தி கொள்ள பலர் முயல்வது தூத்துக்குடி முழுவதும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.
இதனால் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு கேட்டது. எங்கள் நிறுவன கப்பலில் வேலை செய்வோரில் சிலர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மூலமும் தகவல் உறுதியானது.
இதனால் மே 19 ஆம் தேதியே கப்பலை துறைமுகத்திற்கு வரவழைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தனுப்பினோம்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை.
மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.
99 நாட்கள் அமைதியாக போராடினோம் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் ஒரேயொரு சந்தேகம் மட்டும் எழுகிறது.
மார்ச் இறுதியிலேயே ஆலை மூடப்பட்ட பிறகு எதற்கு மே 22 வரை போராட்டம் என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் உரிமம் வழங்கியிருந்தால், போராடியிருக்கலாம். மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மார்ச் இறுதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்த பிறகு, மே 22 அன்று நூறாவது நாள் ஆர்ப்பாட்டம் தேவைதானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டின் போட்டியாளர்களால் சிலர் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதையும், வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதையும் தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்.
கப்பலில் சல் ப்யூரிக் அமிலம் ஏற்றப்பட்ட டேங்கிலிருந்து சல் பர் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிவரும். ஆனால் இதை சுவாசித்த யாருக்கும் கேன்சர் வரவில்லை. நான்கு வருடமாக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் கப்பலில் வேலை செய்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் வரவில்லை. எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி பயப்பட தேவையில்லை என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
R. சிங்காரவேலன், முதன்மை கப்பல் பொறியாளர்.
Lingaa fame Distributor Singaravelan reaction to Rajini speech about Tuticorin Sterlite issue