தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி மாதம் 19ல் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கமல் & லைகா தயாரிப்பில் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இயக்குநர் ஷங்கர் & கமலிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது நீண்ட நேரம் கமல்ஹாசனை காக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
‘உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இந்த விசாரணையை பார்க்கிறேன் என கமல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதி இளந்திரையன் முன்பு, ஆஜரான கமல் தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வரும் நிலையில் விபத்து நடந்தது எப்படி என கமல்ஹாசனை நடித்துக் காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இன்று மதியம் 2.15 மணிக்கு மேல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்போது கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது..
“அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். மார்ச் 3-ல் 3 மணிநேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்குச் சென்று விளக்க இயலாது.
இது கொலை வழக்கு அல்ல. விபத்து வழக்குத்தான். சம்பவ இடத்தில் நடித்துக் காட்டச் சொல்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது… “விபத்து நடந்தபோது நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்தார்.
அவர் விபத்தை நேரில் பார்த்த சாட்சி என்பதால் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
கமல் மட்டுமல்லாமல் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.
சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வருவதால் சட்டம் ஒழுங்கில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக விபத்து நடந்த இடத்தில் நேரில் கமல் ஆஜராகத் தேவையில்லை. விசாரணைக்குத் தேவைப்பட்டால் அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Kamal moves High Court Alleging Harassment by Chennai Police