தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்.
பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.
இதன் துவக்கவிழாவில் பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா பேசுகையில்…
அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர்.
தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.
அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.
சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கைத்தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.
கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப்பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது.
விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக்கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.
#FolkMarleyRecords #AnthonyDaasan