தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அன்னக்கிளியில் தொடங்கி இன்று ஆயிரம் படங்களை கடந்தும் இசையுலகில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா.
இன்று அவர் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்து. தன் வாரிசுகளையும் இசைக்காகவே தாரை வார்த்தவர் இவர்.
முன்பெல்லாம் தூர்தர்ஷன் சேனல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.
இந்திப்பாடல்கள் மட்டுமே அதில் ஒளிப்பரப்பாகும். அந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழனை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் நம் இளையராஜா.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.
ஒரு சிலருக்கு பாடல்கள் மட்டும்தான் கைகொடுக்கும். ஆனால் பின்னணி இசையில் கைத்தேர்ந்தவர் இசைஞானி.
பின்னணி இசைக்காகவே தேசிய விருதுகளை வென்றவர் இவர்.
சமீபத்தில் கூட தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காகத்தான் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் வெறும் பின்னணி இசைக்கு மட்டும் என்னால் இந்த விருதை பெறமுடியாது என வாங்க மறுத்துவிட்டார்.
யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட குரல்களை நம் செவிகளுக்கு தேனாக பாய்ச்சியவர்.
உலகத்திலுள்ள டாப் 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த ‘தளபதி’ பட பாடல் “ராக்கம்மா கையதட்டு” இடம் பெற்றிருந்தது. நான்கு முறை சிறந்த பாடலுக்கான இந்திய தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.
‘தளபதி’ என்றால் அது மணிரத்னம் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆம்.. இன்று இளையராஜாவின் பிறந்தநாள் மட்டுமல்ல மணிரத்னத்தின் பிறந்தநாளும் கூட…
பகல் நிலவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின்னர் ‘இதயகோயில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ என தன் முத்திரையை பதித்தவர்.
கமலுடன் கைகோர்த்த நாயகன் படம் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ போன்ற படத்தின் காட்சிகளும் பாடல்களும் இன்று வரை கவிதை சொல்லும்.
இதில் அஞ்சலி படம் இளையராஜாவின் 500வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் ரஜினி-மம்மூட்டி என இரு சூப்பர் ஸ்டார்களை ‘தளபதி’ படத்தில் இணையவைத்து தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.
‘மாஸ்’ ஹீரோவான ரஜினியை ‘க்ளாஸ்’ ஹீரோவாக காட்டியவர் மணி. இளையராஜா-மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படம் ‘தளபதி’தான்.
அதன்பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.
இனி இளையராஜா, மணிரத்னம் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழாமல் இல்லை.
இவர்கள் நிழல் உலகில் இணையாமல் போனாலும் நிஜ உலகில் தங்கள் பிறப்பால் இணைந்தே இருக்கின்றனர். இது தெய்வத்தின் செயல்.
இந்த இரு துருவங்களையும் ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.