தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசியவை…
இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி
இதே தியேட்டரில் ஒரு ஷோ முடிந்தபிறகு கேபிள் சங்கரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு கதை சொல்லி என்னை நடிக்க சொன்னார்.
பிரமாதமான கதை. சங்கர் தியாகராஜனுக்கு பெரிய நன்றியை சொல்லவேண்டும். எல்லா வெள்ளிக்கிழமையும் காலை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும்போது எங்களுக்குள் விவாதங்கள் நடக்கும்.
வாராவாரம் கூடி பேசுவோம். மிக சரியாக திட்டமிட்டு இதனை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக அஜயன்பாலா, பொன் காசிராஜன் இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவரும் இதில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இயக்குநர் சேரன்
கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு தான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்திருக்கிறீர்கள்.
இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது.
ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும்.
அப்போது இந்த இளைஞர்களுக்கு தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதை சரியான முறையில் புரமோஷன் செய்து வியாபாரத்திலும் லாபம் பார்க்க வேண்டும். சேரன் சொன்னதுபோல இணையத்தில் வெளியிட்டும் பெரிய லாபம் பார்க்க வேண்டும்.
அஜயன்பாலா இயக்குநராகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘பாஃப்டா’ சார்பாக இதேபோல் வண்ணச்சிறகுகள் என்று ரிலீஸ் ஆகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம்
வித்தியாசத்துக்கு பார்த்திபனும் ஆக்ரோஷமாக பேச சுரேஷ் காமாட்சியும் இருக்கிறார்கள். சேரன் உணர்ச்சிமயமாக பேசுபவர். ஆனால் உண்மையைத் தான் பேசுவார்.
கில்டு சார்பில் சில முயற்சிகள் நடக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் பட ரிலீஸ் அன்றே தயாரிப்பாளர்கள் கைகளில் ஒன்றரை கோடி இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் நல்ல காலம் பிறக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
இயக்குநர் மீரா கதிரவன்
இந்த நிகழ்வு என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. என்னை வழி நடத்திய அஜயன்பாலா இயக்குநர் ஆகியிருக்கிறார். கேபிள் சங்கர் சினிமா வியாபாரத்தை பற்றி எழுதியவர்.
ரசிகர்களின் கணக்கும் நம் கணக்கும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் தான் வெற்றியை பார்க்க வேண்டும். ரசிகர்கள் என்று பொதுவாக சொல்கிறோம்.
ஆனால் ரசிகர்களில் வெவ்வேறு வகை உண்டு. ஆனால் இன்றைய நாளில் மூன்றே நாளில் படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது.
இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான். அவனைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
என் படம் ரிலீஸ் தள்ளிப்போனபோது எனக்காக பார்த்திபன் குரல் கொடுத்திருந்தார். அது எனக்கு பெரிய ஆறுதல் தந்தது. பார்த்திபன் அவர்களுக்கு நன்றிகள்.
ஒரு படத்தின் புரமோஷனுக்கு ஆர்ட்டிஸ்ட் வரவேண்டும் என்பதை சங்கங்கள் கட்டாயமாக்க வேண்டும்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ்
கேபிள் சங்கர் எனக்கு நல்ல நண்பர். நான் ஒரு படத்துக்கு அஜயன்பாலாவை வசனம் எழுத அழைத்தேன். அவர் யோசித்தார்.
கமர்ஷியல் தான் கஷ்டம் என்று சொல்லி எழுத வைத்திருக்கிறேன். இந்த படம் தான் எதிர்கால சினிமா. டீம் டீமாக சேர்ந்து படம் பண்ணுவது இனி அதிகரிக்கும்.
இந்த படம் அதற்கு தொடக்கமாக அமையும். மாஸ் ஹீரோவுக்கு நிகரான பேய் இந்த படத்தில் இருக்கிறது. அது நிச்சயம் ஹிட்டை தரும். சேரனின் சி2எச்சுக்கு இந்த திரையுலகம் உதவி புரியவில்லை ஏன் என்பதை சுரேஷ் காமாட்சி விளக்க வேண்டும்.
இயக்குநர் தாமிரா
இந்த மேடையை பார்க்கும்போது எனக்குள் பேய் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இந்த படம் தொடங்கியது முதல் கூடவே இருந்தேன்.
ஆனால் எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பளிக்கவில்லை. தாமதமாகத் தான் கேபிள் சங்கரிடம் கேட்டார். என்னிடம் முன்பே கேட்டிருந்தால் இது 7 அத்தியாயமாக மாறி இருக்கும். வெகு விரைவில் அஜயன்பாலா பெரிய படம் ஒன்றை இயக்குவார். அதற்கான வேலைகள் நடக்கின்றன.
இயக்குநர் வெற்றிமாறன்
இந்த மாதிரியான முயற்சிகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழிலுல் மிகச்சில நடந்தன. இந்த முயற்சி நாம் ஊக்குவிக்க வேண்டியது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.
இது மிகவும் சிரமமான வேலை. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பேயை கையில் எடுத்திருப்பது வியாபாரத்துக்கு எளிதாக இருக்கும்.
அஜயன்பாலாவை என்னுடைய குரு பாலு மகேந்திரா தான் அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த எழுத்தாளர். நேர்மையான விமர்சகர். அவர் மீது நம்பிக்கை உள்ளது.
Hereafter fans wont come to Cinema it must go to his home says Meera Kathiravan