தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் தமிழருவி மணியன் பேசுகையில்…
“ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.
ரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்
காந்திக்கும் ரஜினிகாந்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.
தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார் ரஜினி.
ரஜினி ரசிகர்களான உங்களை, இப்போது மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார்.
நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.
காந்திக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? உடனே இதை சிலர் ஏளனம் பேசுவார்கள். ஏறுகிற மேடைக்கு ஏற்றார்போல் கச்சேரி வாசிக்கும் கலைஞன் நானில்லை. என் நெஞ்சில் பட்டதை நேர்ப்படப் பேசுவதுதான் வழக்கம்.
இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒரு செப்புக்காசைக் கூட அறத்துக்கு மாறாக நான் பெற்றவனுமில்லை, நெறிக்கு மாறாக நான் வாழ்ந்தவனும் இல்லை. ஆகவே மனம் கனிந்து சொல்கிறேன்.
ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும், அன்பு செலுத்தும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த்.
உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன்.
ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது. ரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும்.
ரஜினிகாந்த்தை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போன்ற பல. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறேன்.
என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.
மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: “ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,” என்றார்.
இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது ஆறு. எவ்வளவு சுத்தமான தண்ணீராக இருந்தாலும், அது ஓரிடத்தில் தங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும். எனவே மனிதர்கள் தேங்கிவிடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும்
ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும்.
ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்.
அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்.
ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும்.
ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும்.
அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும். தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் ‘ரஜினிகாந்த் முதல்வர்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.
அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.” என்றார்.
CM Rajini word will become magic word It will create Vibes says Tamilaruvi Manian